சம்மாந்துறையில் விவசாய காணியுள்ளவர்கள் அரச உதவியில் தங்கியிருகிறார்கள்: நௌசாட் கவலை
24 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாய காணியுள்ள சம்மாந்துறையில் 52 சதவீத மக்கள் அரச உதவியில் தங்கியிருப்பது கவலையளிக்கிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருமான ஏ.எம்.எம்.நௌசாட் தெரிவித்துள்ளார்.
சம்மாந்துறை சமூக சேவைகள் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு ஒன்றிய அங்குரார்ப்பண நிகழ்வில் நேற்று(3) பிரதம அதிதியாகயாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கின்றோம் என்ற பிரகடனத்துடன் சம்மாந்துறையில் ஏறத்தாழ 52 சதவீதமான குடும்பங்கள் அரச உதவியிலையே தங்கி வாழ்கின்றது.
நௌசாட்டின் கவலை
இதனை சம்மாந்துறையின் குடிமகனாக ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. என்னுடைய மனதில் நீண்டகாலமாக இருந்துவரும் இந்த மனக்குறையைப் பற்றி சம்மாந்துறை பிரதேச செயலாளரிடம் தெரிவித்திருக்கிறேன்.
இது வெட்கப்படும் விடயமாகவே உள்ளது. 24 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய காணிகள் உள்ளது. அதில் பயிர்செய்கைகளும் இடம்பெறுகிறது.
மாற்றங்கள் அவரவர் மனதிலிருந்தும், அடிப்படையிலிருந்து வர வேண்டும். அரச அல்லது தனியார் உதவிகள் சரியாக இனங்கண்டு உரியவர்களுக்கு கொண்டு சேர்க்கப்பட வேண்டும்.
அரச, தனியார் உதவிகள்
பிழையான தகவல்களை வழங்கி அரச, தனியார் உதவிகள் பெறுவது பாவம் என்ற நிலைக்கு மக்களாகிய நாம் வரவேண்டும்.
நாட்டின் நிலையை கருத்தில் கொண்டு உணவின்றி இருக்கும் மக்களுக்காக ஏதாவது செய்வது தொடர்பில் சம்மாந்துறை முக்கிய அமைப்புகளுடன் அண்மையில் கலந்துரையாடல் ஒன்றை செய்திருந்தேன்.
ஆனால் சம்மாந்துறையின் இளைஞர்கள் தாமாக முன்வந்து அந்தப்பணியை வெற்றிகரமாக செய்தார்கள்.
இதன்போது சேகரிக்கப்பட்ட அவர்களின் தகவலைகளை அடிப்படையாக கொண்டு இனிவரும் காலங்களில் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்று நம்புகிறேன்.
சமூக சேவைகள் அமைப்புக்கள்
சமூக சேவைகள் இறைவனுக்கு பயந்து முன்னெடுக்கப்பட வேண்டும். பயனாளிகளை பகிரங்கப்படுத்தி அவர்களை பொதுவெளியில் சங்கடப்படுத்துவது எப்போதும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
இன்று நாம் இருக்கும் நிலைக்கு நாம் எல்லோரும் பொறுப்பாளிகள். வருமானத்தை மீறி செலவு செய்யும் பழக்கத்தினால் தான் இன்று இந்த நிலை உருவாகியுள்ளது.
சம்மாந்துறை பிரதேசத்தில் 300 க்கு மேற்பட்ட சமூக சேவைகள் அமைப்புக்கள் இருக்கிறது. ஆனால் இயங்குநிலையில் உள்ளது விரல் விட்டு என்னும் அளவுக்கே இருக்கிறது.
இதனை பெரும் குறைபாடாக நான் பார்க்கிறேன். என்னுடைய பொதுவாழ்வில் நான் நிறைய விடயங்களை அறிந்துகொண்டு அதனூடாக என்ன வழிகாட்டல் இருக்கின்றது என்று பார்க்கிறேன்.
சமூக சேவைகள் மூலம் சமூகம் கட்டியெழுப்பட வேண்டும். இப்போது அரசியல் எனும் சொல் மக்களுக்கு மிகவும் வெறுப்பாக மாறியுள்ளது.
சமூக சேவை அமைப்புக்களுடன் இணைந்து பிரதேசத்தின் கட்டமைப்பில் மேம்பாட்டை உருவாக்க எப்போதும் தயாராக
இருக்கிறோம்”என தெரிவித்துள்ளார்.