திருகோணமலையில் இரவு நேரங்களில் வயல்களுக்கு தீ மூட்டப்படுவதால் விவசாயிகள் மத்தியில் அச்சம்
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தம்பலாகாமம் கமநல சேவை பிரிவுக்குட்பட்ட சில விவசாயப் பகுதிகளில் இரவு நேரங்களில் வயல்களுக்கு தீ மூட்டப்படுவதனால் அதனூடாக பயணிக்கும் பாதசாரிகள் அச்சம் கொண்டுள்ளனர்.
வயல் நிலங்களில் காணப்படும் களைகள் மற்றும் விவசாயக் கழிவுகளை அகற்றும் நோக்கில் சிலர் தீ மூட்டுவதாக தெரிவிக்கப்படும் நிலையில், கட்டுப்பாடின்றி பரவும் தீ காரணமாக அருகிலுள்ள விவசாய நிலங்கள், பயிர்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.
விவசாயிகள் மத்தியில் அச்சம்
குறிப்பாக இரவு நேரங்களில் தீ மூட்டப்படுவதால், தீ பரவும் திசையை உடனடியாக அவதானித்து கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், வறட்சியான காலநிலை நிலவி வரும் நிலையில் வயல் பகுதிகளில் தீ மூட்டப்படுவது தீ வேகமாக பரவுவதற்கான வாய்ப்பை அதிகரிப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
எனவே, வயல் நிலங்களுக்கு தீ மூட்டும் நடவடிக்கைகளை பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டும் என்றும், தீயை கட்டுப்பாடின்றி விட்டுச் செல்லாமல் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.