பயிர்ச்செய்கையை நேரில் சென்று பார்வையிட்ட மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்
நாட்டில் உள்ள விவசாயிகள் தமது தோட்டம், விவசாய செய்கைகளை இயற்கை பசளை ஊடாக மேற்கொள்ள ஊக்குவிப்பதற்கு உரிய திணைக்களங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த அறிவுறுத்தலையும் கருத்தில் கொண்டு மன்னார் மாவட்டத்தில் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் இயற்கை உற்பத்தி பசளையை மேற்கொள்ளும் இடம் மற்றும் இயற்கை பசளை ஊடாக மேற்கொள்ளும் பயிர்ச்செய்கையினை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் இன்று காலை 9.30 மணியளவில் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருடன் கமநல சேவை உதவி ஆணையாளர், விவசாய பணிப்பாளர், மன்னார் நகர சபையின் செயலாளர், மாவட்ட விவசாய உத்தியோகத்தர் ஆகியோர் இணைந்து குறித்த விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது முதலில் மன்னார் நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் கழிவுகளைக் கொண்டு தயாரிக்கும் இயற்கை பசளை தயாரிப்பு முறைகளை நேரடியாக சென்று பார்வையிட்டனர்.
மன்னார் நகர சபை பிரிவில் சேகரிக்கப்படுகின்ற கழிவுப் பொருட்கள் தரம் பிரிக்கப்பட்டு கூட்டுப்பசளை தயாரிக்கப்பட்டு வருவதுடன், மாதம் எட்டாயிரம் கிலோ இயற்கை பசளை தயாரிப்பதுடன், விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
குறித்த பசளையை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டதோடு, குறித்த பசளையின் சரியான தரத்தினை பரிசோதனை செய்ய அனுப்பி வைக்க உள்ளதாக அரசாங்க அதிபர் திருமதி.ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பசளையில் குறைபாடுகள் எவையும் காணப்பட்டால் அவற்றை நிவர்த்தி செய்து தரமான பசளையை மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கும், ஏனைய மாவட்டங்களுக்கும் விநியோகம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து மன்னார் கரிசல் பகுதியில் இயற்கை முறையிலான பசளையை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் தோட்டச் செய்கையையும் அரசாங்க அதிபர் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.