நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற விபத்து! (Photos)
புத்தளம் - பெல்வத்தை பகுதியில் வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (11.03.2023) பதிவாகியுள்ளது என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த விபத்தில் 40 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குடும்பஸ்தர் உயிரிழப்பு
சீனி தொழிற்சாலையிலிருந்து தொழிலாளர்களை ஏற்றி வந்த லொறியும், மோட்டார் சைக்கிளொன்றும் விபத்துக்குள்ளாகியதில் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபரை புத்தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் லொறியின் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்று பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் புத்தள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு ஆயித்தியமலை வயல் பகுதியில் உழவு இயந்திரத்தால் வயல் உழுது கொண்ட போது உழவு இயந்திரம் தலைகீழாக புரண்டதில் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து சம்பவம் இன்று சனிக்கிழமை (11.3.2023) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்துள்ளார்.
ஆயித்தியமலை நெல்லூரைச் சேர்ந்த 34 வயதுடைய தர்மதாசா சதீஸ்வரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து அவரை பொலிஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டு. போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.








