வடக்கில் சட்டவிரோத கடற்றொழிலால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள்
வடக்கு கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகளாலும், அதிகரித்துள்ள தடைசெய்யப்பட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளாலும் 46,000ற்கும் மேற்பட்ட கடற்றொழில் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "வடமாகாணத்தில் வடக்கு கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய கடற்றொழில் செயற்பாடுகளாலும், அதிகரித்துள்ள தடைசெய்யப்பட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளாலும் 46,000ற்கும் மேற்பட்ட மேற்பட்ட கடற்றொழில் குடும்பங்களும், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கடற்றொழில் பெண்தலமைத்துவக் குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
உடனடி நடவடிக்கை
எனவே, வடபகுதி கடற்றொழில் குடும்பங்களின் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தடைசெய்யப்பட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் கடற்றொழில் அமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேவேளை, உணவுப்பொருட்களுக்கான வரி குறைக்கப்பட வேண்டும். குறிப்பாக அரிசி, சீனி, மா, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட வேண்டும்.
மேலும், எனது மாவட்டத்திலும், வடமாகாணத்திலும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் சில கருத்துக்களைத் தெரிவிக்கலாமென நினைக்கின்றேன்.
கிளீன் ஸ்ரீலங்கா எனச் சொல்லப்படுகின்ற விடயத்திற்கு மாறாக வடக்கு மாகாணத்திலே சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளின் மோசமான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
அராசாங்கத்தின் ஊக்குவிப்பு
முன்னைய அரசாங்கங்களின் காலங்களிலும் இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்திருந்தன. இந்நிலையில் தற்போதைய புதிய அரசாங்கத்தின் காலத்திலாவது சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் குறைவடையும் என எதிர்பார்த்திருந்தோம்.
இந்நிலையில், கடற்றொழில் அமைச்சின் உயர் அதிகாரிகளே சுருக்குவலை, வெளிச்சம்பாய்ச்சி கடற்றொழில் போன்ற தடைசெய்யப்பட்ட தொழில்களை மேற்கொள்வதற்கு ஊக்குவிக்கின்றார்களோ என நாம் எண்ணக்கூடியவாறு இருக்கின்றது.
தற்போதைய கடற்றொழில் அமைச்சின் உயர் அதிகாரிகள் இலஞ்சம் பெற்று தடைசெய்யப்பட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை ஊக்குவிப்பதாக மக்கள் தெரிக்கின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |