ராஜபக்ச குடும்பம் தொடர்பில் சமூக வலைதளங்களில் பரவும் போலி செய்தி! அலுவலகம் மறுப்பு
கொழும்பு, உலக வர்த்தக நிறுவனத்தில் ஆடம்பரமான அலுவலகம் ஒன்றை நடத்திக்கொண்டிருந்த நிலையில் பெரும் தொகை நிதி முறைகேடு குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திக்கோ குழும தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலியுடன், முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தொடர்பு இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அலுவலகம் இன்று மறுத்துள்ளது.
இது குறித்து ராஜபக்ச அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மில்லியன் கணக்கான பணம் மோசடி
சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் மற்றும் படங்கள் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை என்று குறிப்பிட்டுள்ளது.
ஷிரந்தி ராஜபக்ச கலந்து கொண்ட ஒரு விழா மற்றும் திரைப்பட தயாரிப்பு நிகழ்ச்சியின் தொடக்க விழா ஆகியவற்றில் திலினியும் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
எனினும் இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் அனுசரணையில் சிரேஷ்ட அரசியல்வாதிகள் மற்றும் கலைஞர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவரால் ஷிராந்தி ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஷிராந்தி ராஜபக்ச அல்லது முன்னாள் ஜனாதிபதியின் குடும்ப உறுப்பினர்களில் எவருக்கும் திலினி பிரியமாலியுடன் தொடர்பு இல்லை என்பதை முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகம் திட்டவட்டமாக நிராகரிக்கின்றது.
மேலும் இது தொடர்பான படத்தை தவறான நோக்கத்துடன் பரப்பும் சில நபர்களின் செயல்களை கண்டிக்கிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
226 மில்லியன் ரூபாய், 60,000 அமெரிக்க டொலர்கள் மற்றும் 100,000 அவுஸ்திரேலிய டொலர் ஆகியவற்றை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் திலினி பிரியமாலியை ஒக்டோபர் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர், தனது அலுவலகத்தை அண்டிய பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளை
மேற்கொண்டு வரும் பல வர்த்தகர்களுடன் நட்புறவைக் கொண்டிருந்ததாகவும், அதிக
வருமானம் தருவதாக கூறி வர்த்தகர்களிடம் பணம் பெற்றதாகவும் குற்றப் புலனாய்வுப்
பிரிவினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.