போலி ஊடக பயிற்சி நிறுவனங்கள்: நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியம் எச்சரிக்கை
நுவரெலியா மாவட்டத்தின் பல முக்கிய நகரங்களில் ஊடக பயிற்சிகள் என்ற பெயரில், இளைஞர் யுவதிகள் மற்றும் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போலி நபர்கள் செயற்படுவதாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
போலி ஊடக பயிற்சி நிறுவனங்கள் பற்றி வெளியிடப்பட்ட அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளது.
ஊடக பயிற்சி நிறுவனங்கள்
மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, போலி ஊடக பயிற்சி நிறுவனங்கள் குறித்து நாம் ஆராய்ந்து பார்த்ததில் குறித்த நபர்கள் ஒரு சில நாட்கள் தனியார் வானொலிகளில் பணிபுரிந்து விட்டு பின்னர் அங்கு ஏதாவதொரு குற்றச்சம்பவத்துக்காக வெளியேற்றப்பட்டவர்களாக இருப்பதை அறிய முடிந்தது.
இவர்கள் தொடர்ந்தும் தாம் பணி புரிந்த ஊடக நிறுவனங்களின் பெயர்களில் போலி கல்வி பட்டங்களை தமது பெயர்களுக்கு பின்னால் அச்சிட்டு அவற்றை விநியோகித்து அல்லது சமூக ஊடகங்களில் அவற்றை பதிவேற்றி இதை ஒரு வர்த்தகமாக செய்து வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதழியல் அல்லது வானொலி /தொலைகாட்சி அறிவிப்பு நிகழ்ச்சி தொகுப்பு போன்றவற்றை மாதங்களிலோ அல்லது ஒரு வருடத்திலோ கற்க முடியாது.
மேலும் ஊடக டிப்ளோமாக்கள், பட்டங்களை வழங்கும் தேசிய பல்கலைக்கழகங்களைத் தவிர பதிவு செய்யப்பட்ட, பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட எந்த ஒரு தமிழ் ஊடக பயிற்சி நிறுவனமும் நுவரெலியா மாவட்டத்தில் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.
3 மாத பயிற்சி நெறி என ஒருவரிடம் 15 ஆயிரம் ரூபாய் தொகையை அறவிடும் இவ்வாறான போலி நிறுவனங்கள் குறித்து இளைஞர் யுவதிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அவதானமாக இருக்கும் படி நாம் வேண்டுகிறோம். இவர்களுக்கு சாதாரணமான ஒரு சான்றிதழே வழங்கப்பட்டுள்ளது.
துஷ்பிரயோக சம்பவங்கள்
சில இடங்களில் பெண்பிள்ளைகள் தங்கி படிக்கலாம் என்ற அறிவிப்போடு விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. அவ்வாறான இடங்களில் துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெறாது என்பதற்கு எந்த வித உத்தரவாதங்களும் இல்லை.
இது தொடர்பில் நாம் குறித்த நகரங்களின் உள்ளூராட்சி சபை தலைவர்கள் பொலிஸ் நிலையங்களின் பெண்கள் /சிறுவர் பிரிவு ஆகியவற்றின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளோம்.
ஆகவே ஊடக பயிற்சி நெறிகள் என்றவுடன் தமது பிள்ளைகளை அதற்கு அனுப்பும் பெற்றோர் தயவு செய்து எம்மை தொடர்பு கொண்டு தெளிவை பெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இது தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின்
தேசிய அமைப்பாளர் சுப்ரமணியம் தியாகு (0777757815) என்பவரை தொடர்புகொள்ளுமாறு மேலும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.