யாழில் போலி காணி மோசடி! சட்டத்தரணி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
யாழ்ப்பாணம் மாநகர் அராலி வீதியில் போலி உறுதி மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணியை நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்க யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நளினி சுபாஸ்கரன் கட்டளையிட்டுள்ளார்.
சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ள சட்டத்தரணியில் மருத்துவ நலன் கருதியும் அவர் காணி மோசடியின் உண்மையை வெளிக்கொணர முன்னெடுக்கப்படும் விசாரணை நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார் என்பதையும் உறுதியளிப்பதாக முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தை பரிசீலித்த பின்னர் நீதிமன்று பிணை அனுமதியை வழங்கியுள்ளது.
போலிக் கையொப்பங்கள் மூலம் மோசடி
யாழ்ப்பாணம் மாநகர் அராலி வீதி – பொம்மைவெளி பகுதியில் உள்ள காணி ஒன்று அதன் இறந்து விட்ட உரிமையாளர்களான தம்பதியின் போலிக் கையொப்பங்கள் மூலம் நிறைவேற்றப்பட்ட உறுதியினால் மோசடியாக உரிமை மாற்றம் செய்யப்பட்டது.
அது தொடர்பாக யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை நடத்தி பொலிஸார், கடந்த மாதம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்கைத் தொடுத்து சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்து மன்றில் முற்படுத்தினர்.
அவர் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 9 சந்தேக நபர்களும் கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். சந்தேக நபர்கள் சார்பான பிணை விண்ணப்பத்தை ஆராய்ந்து வரும் 21ஆம் திகதி கட்டளை வழங்கப்படும் என்று தவணையிட்ட மன்று அன்றுவரை சந்தேகநபர்கள் 9 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
நீதிமன்றின் உத்தரவு
இந்த நிலையில் சட்டத்தரணி சார்பில் நேற்று நகர்த்தல் பத்திரத்தை முன்வைத்து ஆதரித்த சட்டத்தரணி, கலாநிதி குமாரவடிவேல் குருபரன் பிணை விண்ணப்பத்தை முன்வைத்து மேலதிக காரணங்களை மன்றில் சமர்ப்பித்தார்.
“சட்டத்தரணி பல்வேறு மருத்துவ சிகிச்சைகளுக்கு உட்பட்டவர். அவரது சிகிச்சை தொடர்பான மருத்துவ சான்றிதழ்கள் மன்றின் கவனத்துக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன. அவர் எந்த வகையிலும் இந்த வழக்கின் விசாரணைகளுக்கு இடையூறாகவோ தடையாகவோ ஒருபோதும் செயற்படமாட்டார். சட்டத்தரணி என்ற வகையில் அவர் இந்த மோசடி தொடர்பான உண்மையைக் கண்டறியந்து நீதியை நிலைநாட்ட ஒத்துழைப்பு வழங்குவார் என்பதை அவர் சார்பில் உறுதிபட மன்றிடம் முன்வைக்கின்றோம்.
அவர் பிணையில் உள்ள காலப்பகுதியில் நீதி பரிபாலனத்திலயோ பொலிஸ் விசாரணைகளிலோ தலையீடு செய்யமாட்டார் என்ற அடிப்படையிலேயே பொலிஸாரின் விண்ணப்பங்களும் அமைந்துள்ளதும் சுட்டிக்காட்டத்தக்கது.இத்தகைய காரணங்களின் அடிப்படையில் அவரை பிணை விடுவிப்பதற்கான கட்டளையை ஆக்குமாறு கோருகின்றோம்” என்று சட்டத்தரணி, கலாநிதி கு.குருபரன் சமர்ப்பணம் செய்தார்.
சந்தேக நபர் சார்பான சமர்ப்பணத்தை ஆராய்ந்த மன்று நிபந்தனையுடனான பிணையில்
செல்ல அனுமதியளித்துள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
