போலி சாரதி அனுமதி பத்திரம் 8 முறை நீடிப்பு..! விசாரணையில் சிக்கிய பொலிஸ் அதிகாரி
போக்குவரத்து பொலிஸாரினால் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தை போலியாக தயாரித்த குற்றச்சாட்டின் அடிப்படையில், யாழ். கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை இன்று(12.05.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரியும் சாரதியுடன் கைது
கடந்த 4ஆம் திகதி மட்டக்களப்பு - தாழங்குடா பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போக்குவரத்து பொலிஸார் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
இதன் போது, மோட்டார் சைக்கிள் சாரதி பொலிஸாரால் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தை காட்டியுள்ளார்.

குறித்த தற்காலிக சாரதி அனுமதி பத்திரம், கடந்த 2024ஆம் ஆண்டு யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வீதி விபத்தில், சாரதி அனுமதி பத்திரம் பொலிஸாரால் கைப்பற்றி நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றி வந்த காத்தான்குடியைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி 01.08.2024 தற்காலிகமாக சாரதி அனுமதி பத்திரம் ஒன்றை வழங்கியுள்ளார்.
போலி சாரதி அனுமதி பத்திரம் 8முறை நீடிப்பு
இதனைத் தொடர்ந்து பொலிஸ் அதிகாரி, சாரதிக்கு குறித்த சாரதி அனுமதி பத்திரத்தை கோப்பாய் பொலிஸ் நிலைய இறப்பர் முத்திரையை பயன்படுத்தி 8 முறை நீடித்து கொடுத்துள்ளார் என்பதும் விசாரணையில் உறுதிச் செய்யப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் பொலிஸ் அதிகாரியின் வீட்டை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது, இறப்பர் முத்திரை, போலியான தற்காலிகமான சாரதி அனுமதி பத்திரம் மீட்கப்பட்டுள்ளன.
விளக்கமறியல் உத்தரவு
இந்நிலையில், மோட்டார் சைக்கிள் சாரதி கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர். இவரை நாளை(12) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, போலியான ஆவணங்களை தயாரித்து வழங்கி வந்த குறித்த பொலிஸ் அதிகாரியை, இன்று(11) பொலிஸ் நிலையத்துக்கு வாக்கு மூலம் ஒன்றை பதிவு செய்ய அழைப்பு விடுத்து கைது செய்துள்ளனர்.
குறித்த பொலிஸ் அதிகாரியை நாளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.