கோட்டாபய அரசின் நூற்றியோராவது தோல்வி!! கொலைக்களத்தில் விவசாயமும் விவசாயிகளும்
நெல் பயிரிடல் காலம் ஆரம்பித்திருக்கிறது. இம்முறை பருவ மழையும் பிசுபிசுப்புக்களைக் காட்டுகிறது. விவசாயிகள் 'விதைப்பமோ.. வேண்டாமோ' என்ற மனநிலையோடுதான் வயலில் கால்வைத்திருக்கின்றனர். சிலர் சேமிப்பில் இருக்கின்ற நெல்லை வீணடித்துவிடக்கூடாது என்ற நோக்கில் விதைக்காமலேயே விட்டுவிட்டனர்.
நாட்டின் வடக்குப் பகுதியின் நிலை இதுவென்றால், வவுனியாவைத் தாண்டி அனுராதபுரத்தைப் பார்த்தால் இம்முறை பல்லாயிரக்கணக்கான வயல்கள் விதைக்காமலேயே விடப்பட்டுள்ளன. இதற்குப் பிரதான காரணம் உரம், கிருமிநாசினிகள் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளமைதான்.
இந்தநிலை நாட்டில் தோன்றுவதற்கு காரணம் என்ன?
கொரோன ஏற்படுத்திய நிதிநெருக்கடி இலங்கை வரலாற்றில் என்றுமில்லாத வகையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிதான் உரம், கிருமிநாசினி இறக்குமதி தடைகளுக்கும் காரணமாக சொல்லப்படுகிறது.
2019 ஆம் ஆண்டிலிருந்து உலகின் அரசியல், பொருளாதார, சமூக தளங்களின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் பிரதான சக்தியாக கொரோனா மாறிவிட்டது. கொரோனா பரவல் காரணமாக வருடக்கணக்கில் விமான நிலையங்கள், பொதுப்போக்குவரத்துகள், சுற்றுலா விடுதிகள் என அரசுகள் வருமானம் ஈட்டும் அனைத்துத் துறைகளுமே தடைப்பட்டன. இதனால் உலகின் அனைத்து நாடுகளுக்குமே பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது.
ந்நிலைமைகளை முன்கூட்டியே உணர்ந்த நாடுகள் பல, அதற்குரிய தகுந்த பொறிமுறைகளை உருவாக்கி இந்த அனர்த்தத்திலிருந்து தப்பிக்கொண்டன. எந்தப் பொறிமுறையும் இல்லாது, வெறும் அரசியல் அதிகாரத்திற்காக கொரோனாவை ஒரு அரசியல் பொறியாக மட்டும் பயன்படுத்திய இலங்கை, இதில் ஆழமாகவே சிக்கிவிட்டது. இதனால் நாட்டின் வருமானத்தில் பெரும்பங்கை ஈட்டித்தரும் சுற்றுலாத்துறை படுத்தேவிட்டது.
வருமானமின்மை பெரும் பொருளாதார சிக்கலைத் தோற்றுவிக்க, அதனைச் சமாளிக்க வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இறக்குமதி தடை ஏற்படுத்தப்பட்டது. உரம் இறக்குமதி தடை ஆரம்பத்தில் வாகன இறக்குமதிக்கே தடையேற்றபடுத்தப்பட்டது. கையிருப்பில் இருக்கும் டொலர்களில் பெருமளவு பகுதியை வெளிவிட வேண்டியிருப்பதால் அந்தத் தடை முக்கியமெனக் கருதப்பட்டது. அதுவே உழுந்து, மஞ்சள் என உணவுப் பொருட்களுக்கும், பின்னர் உரம், கிருமிநாசினி போன்றவற்றுக்குமான இறக்குமதித் தடையை நியாயப்படுத்தியது.
ஆனால் பொருளாதார நெருக்கடி காரணமாகவே உரம், கிருமிநாசினி இறக்குமதி தடைகள் ஏற்படுத்தப்பட்டன என்ற விடயத்தை வெளியில் சொல்லாது, நேர்மறையானதொரு விடயமே வெளியில் சொல்லப்படுகிறது. அதாவது இலங்கைவாழ் மக்கள் உலகளவில் அதிகளவான நஞ்சினைத் தம் உணவோடு கலந்து உண்கின்றனர். அதனால் புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. அதிகளவில் நெல் உற்பத்தி செய்யப்படும் பொலநறுவை, அனுராதபுர மாவட்டங்களின் நிலத்தடி நீருடன் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் கிருமிநாசினிப் பொருட்கள் கலந்துள்ளமையால் அங்கு நீர்மாசு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் அதிகளவில் சிறுநீரக செயலிழப்புக்குள்ளாகும் மக்கள் இம்மாவட்டங்களிலேயே அடையாளம் காணப்படுகின்றனர். எனவே இதற்கு ஒரே தீர்வு சேதனப் பசளைஇ கிருமிநாசினிகளை ஒழித்துஇ அசேதனப் பயிர்ச்செய்கைக்கு மாறுவதுதான் என்ற முடிவுக்கு அரசு வந்திருக்கிறது. அசேதனப் பயிர்ச்செய்கையின் சாத்தியங்கள் உண்மையிலேயே இலங்கைவாழ் விவசாயிகள் தம் தொழில் பாரம்பரியத்தில் இரசாயனமற்ற உணவுற்பத்தியையே கைக்கொண்டிருந்தனர்.
மாட்டெரு, வீட்டுக்குப்பைகள் என்பன இயற்கையான விவசாயத்திற்கான பயிர் ஊக்கிகளாகப் பயன்படுத்தப்பட்டுவந்தன. வாக்குப் பொறுக்கும் வேட்டையில் இறங்கிய பெரும்பான்மையின அரசியல் கட்சிகளே இந்த மரபார்ந்த இயற்கைப் பயிரிடல் முறையிலும் மாற்றங்களைக் கொண்டுவந்தன. கடந்த தேர்தல் வரையில் பசளை – உரம் மானியமாக வழங்காத தேர்தல் அறிக்கைகளை இலங்கை வரலாற்றில் காணவேமுடியாது.
அரசியல்வாதிகள் போட்டிபோட்டு விவசாயிகளை சேதனப்பயிரிடலுக்குப் பழக்கப்படுத்தினர். தற்போது தமது அரசியல் இருப்புக்கு பிரச்சினை வரும்போது கோட்டினை முதலில் இருந்து வரைவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். பொருளாதார ரீதியில் நன்கு வளர்ந்துள்ள ஜேர்மன் போன்ற நாடுகளில்கூட இரசாயனமற்ற விவசாய முயற்சிகள் ஊக்குவிக்கப்படுகின்றன. ஆயினும் அதன் மொத்த விவசாய நிலத்தில் 10 வீதத்தை மாத்திரமே அசேதனப் பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்துகிறது.
உலகின் தூய்மையான நாடெனக் கருதப்படும் சுவிசர்லாந்து கிருமிநாசினிகளைத் தடைசெய்வது சாத்தியமற்றதெனக் கூறியிருக்கின்றது. ஆனால் பொருளாதார ரீதியில் நலிந்து கிடக்கும் இலங்கை 100 வீதம் அசேதனப் பயிர்ச்செய்கையை ஒரு போகத்திலேயே சாத்தியப்படுத்தக் கங்கணம் கட்டிநிற்கிறது.
இறக்குமதி சார் பிரச்சினைகள் அரசு பிரகடனப்படுத்தியுள்ள இயற்கை விவசாயத்திற்கான 'பச்சைபுரட்சி' விவசாயிகளைப் பெரிதும் பாதித்துள்ளது. எனவேதான் கடந்த மே மாத்திலிருந்து நாடுமுழுவதும் விவசாயிகளது போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன. அத்தோடு அரசுக்கு ஆலோசனை தரும் புலமையாளர்களும் இதில் சற்று விதிவிலக்குகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டிருக்கின்றனர். இதற்கு செவிசாய்த்த அரசு, உள்நாட்டில் தயாரிக்கப்படும் அசேதனப் பசளைக்குப் பதிலாக சீன நிறுவனமனமொன்றிடமிருந்து அசேனதப் பசளையை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது.
தற்போது குறித்த சீன நிறுவனம் இலங்கைக்குத் தரவுள்ள அசேதனப் பசளையானது மண்ணுக்கு தீங்கை ஏற்படுத்தும் அபாயகரமான பக்ரீரியாக்கள் அடங்கியது என்பதைக் காரணமாகச் சுட்டி, அதனை நாட்டுக்குள் கொண்டுவரவோ, அதற்குரிய பணத்தை செலுத்தவோ அரசினால் மறுப்புத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சீன நிறுவனமோ, சர்வதேச வர்த்தக கொள்கைகள், இலங்கையின் அசேதனப்பசளைப் பரிசோதனைகளில் உள்ள குறைபாடுகள் எனப் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, தமது அசேதனப் பசளையை மூன்றாம் தரப்பின் பரிசோதனைக்குக் கையளிக்கத் தயார் என்கிறது.
எப்படியாவது கேள்விகோரப்பட்ட அசேதனப் பசளையை இலங்கையின் தலையில் கட்டியடித்துவிட்டே திரும்புவோம் என்ற விடாப்பிடியில் குறித்த சீன நிறுவனமும் நிற்கிறது. ஆயினும் இந்த இழுபறியில் விவசாயிகளது கழுத்துத் தொங்கிக்கொண்டிருப்பதை அரசு கவனிக்கவேயில்லை. நூற்றியோராவது தோல்வி இவ்வாறு இழுபறி நிலையில் இருக்கும் அசேதனப் பசளை விவகாரத்தினால் விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவர் என்றே எல்லோராலும் சொல்லமுடிகிறது. ஆனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டால் அது நாட்டு மக்கள் அனைவரையுமே பட்டினியில் தள்ளும் என்கிற யதார்த்தநிலையைக் கூடப் புரிந்துகொள்ள அரசோ, விவசாய அமைச்சோ தயாராக இல்லை.
அசேதனப் பயிர்ச்செய்கையானது இலங்கைக்கு மிகவும் அவசியமானதொன்று. சிறியளவு சனத்தொகையையும், வளமான மண்ணையும், நீரையும் கொண்டிருக்கின்ற இந்நாடு இயற்கை விவசாயத்திலேயே பெருமளவு முன்னேற்றத்தைக் கண்டிருக்க முடியும். இந்த வேலைத்திட்டங்கள் இன்றைக்கு பத்துவருடங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டிருப்பின் அது சாத்தியப்பட்டிருக்கும்.
இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் இதுபோன்ற அபிவிருத்தித் திட்டங்கள் முழுக்க முழுக்க அரசியல் நோக்குடன் மேற்கொள்ளப்படுகின்றன. குறித்த திட்டங்களுக்கு காலநிர்ணயங்களோ, மீளாய்வுகளோ நடத்தப்படாது தேர்தலை இலக்காக வைத்து நடைமுறைப்படுத்துவதால் அவை தோல்வியிலேயே முடிவடைகின்றன. அந்தவகையில் இதுவும் அரசின் நூற்றியோராவது தோல்வியாகலாம்.
பனங்கொட்டையை நடுகைசெய்தவுடன் பனம்பழம் சாப்பிடக் கனவுகாணும் இந்தத் திட்டம் அரசின் அடுத்த கையாளாகத்தனத்தையே மக்களுக்கு வெளிப்படுத்தும். ஆனால் இதில் அழிவடையப்போது விவசாயமும், விவசாயிகளும்தான். பயிரமுது தரும் பாடம் இயற்கைசார்ந்த விவசாய முயற்சிக்கு ஒரு படிப்பினையை இவ்விடத்தில் பதிவிடுவது அவசியம்.
விடுதலைப்புலிகளின் நிர்வாகக் கட்டமைப்புகள் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இயங்கியபோது, அவர்களிடம் பொருண்மிய மேம்பாட்டுப் பிரிவு என்ற அமைப்பு இயங்கியது. போராளிகள், விவசாய சங்கங்கள், விவசாயிகள் இணைந்து நடத்திய இந்தக் கூட்டமைப்பானது, காலத்திற்குப் பொருத்தமான விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அதாவது இலங்கை அரசு புலிகளது கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது ஏற்படுத்திய பொருளாதாரத் தடைகளில் உரம், கிருமிநாசினிகள் முதன்மையானவையாக இருந்தன. எனவே பொருளாதார ரீதியில் தன்னிறைவைத் தக்கவைப்பதற்கான மாற்றுவழிகளை பொருண்மிய மேம்பாட்டுப் பிரிவு விரைவாகவே நடைமுறைப்படுத்தியது.
வேம்பு உள்ளிட்ட சில மரங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட 'பயிரமுது' என்ற உரத்தை விவசாயிகளுக்கு வழங்கியது. இந்தப் பயிரமுதானது சமநேரத்தில் பீடைக்கொல்லியாகவும், பயிர் ஊக்கியாகவும் தொழிற்பட்டது. வெற்றிகரமான இந்தப் பயிரமுதினை விஞ்ஞானிகளோ, ஆய்வகங்களோ கண்டுபிடிக்கவில்லை. அனுபவம்வாய்ந்த விவசாயிகளும், மக்கள் நலனில் அக்கறையுள்ளோருமே கண்டுபிடித்தனர். இங்கு யாரும் 'கொமிஷனுக்குப்' பணியாற்றாமைதான் பயிரமுதினை இன்றும் விவசாயிகள் நினைவுவைத்திருக்கின்றமைக்குப் பிரதான காரணம்.
- ஜெரா -