உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மைகள் வெளிவருவது போல் தெரிகிறது! ஸ்ரீநேசன் எம்.பி
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மைகள் ஏழாண்டு காலத் தூக்கத்தின் பின்னர், விழித்து வருவது போல் தெரிகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இந்த உண்மை மூன்று ஜனாதிபதிகளின் ஆட்சியில் மறைக்கப்பட்டிருந்தன. மைத்திரி, கோத்தா, ரணில் ஆகிய ஜனாதிபதிகளின் ஆட்சியில் இந்த உண்மை வெளியில் வரவில்லை. அதனைக் கண்டறிவதற்கான தேடலும் முறையாக நடைபெறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
(05.06.2026) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, மைத்திரியின் அறியாமை, கோத்தாவின் தனித்தேவை, ரணிலின் அதிகார இருப்புத்தேவை, போன்றவற்றால் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கான உண்மைகள் கண்டறியப்படவில்லை.
பிள்ளையானின் தனிப்பட்ட செயலாளராகவும், சுரேஷ் சலேயின் நம்பிக்கையாளராகவும் இருந்த ஆஸாத் மௌலான நாட்டை விட்டு வெளியேறிய பின்னர், சனல்-4 இற்கு உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் மற்றும் பல விடயங்கள் தொடர்பாகவும் தகவல்களை அளித்துள்ளார்.

அதில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான பல விடயங்கள் பேசப்பட்டிருந்தன. அவை தொடர்பாக அக்கால ஜனாதிபதிகளான கோத்தா, ரணில் ஆகியோர் அக்கறை காட்டவில்லை. அவர்கள் தமது அதிகார இருப்பின் மீதுதான் கூடிய கவனம் செலுத்தினர்.
ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவின் வருகையின் பின்னர், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் சூத்திரதாரிகள் விடயத்தில், ஆண்டகை மல்கம் ரஞ்சித் மற்றும் பாதிக்கம்பட்டவர்களின் உறவுகள் நம்பிக்கை கொள்ளத்தக்க விதத்தில் விசாரணைகள் சென்று கொண்டிருக்குகிறன.
ஆட்சி மாற்றம்
இந்த விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி கோத்தாவின் பெயரையும் ஊடகங்கள் உச்சரிப்பதைக்காண முடிகின்றது. அந்தவகையில், ஆட்சி மாற்றத்தையும், அதிகார இருக்கையையும் பெற்றுக் கொள்வதற்கான தாக்குதலாகவே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் அமைந்திருப்பதாக நம்பப்படுகிறது.

அதிகார வர்க்கத்தின் அதிகாரப்பசி என்பது எவ்வளவு தூரம் கொடூரமானது என்பதை மக்களால் உணர முடிகின்றது. அக்கால சர்வாதிகார முடியாட்சிக் காலத்தில் இந்தியாவில் கௌடில்லியரும், இத்தாலியில் மக்கியவல்லியும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும், அதனைத்தக்க வைப்பதற்குமான சதிகள்,சூழ்ச்சிகள் பற்றிய ஆலோசனைகளை மன்னர்களான சந்திரகுப்த மௌரியனுக்கும்,மெடிசி மன்னனுக்கும் கூறியிருந்தனர்.
அக்கால முடியாட்சிச்சதிகளை இக்கால குடியாட்சிக் காலத்தில் இந்நாட்டு ஆட்சியாளர்கள் பயன்படுத்தியுள்ளார்களா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
பௌத்த தர்மத்தை இடையறாது துதிக்கின்றவர்களாக, மதிக்கின்றவர்களாக இந்நாட்டின் ஆட்சியாளர்கள் காட்டிக்கொள்கின்றனர். அப்படியானவர்கள் அதிகாரத் தேவைக்காக அப்பாவிகளின் உயிர்களோடும் விளையாடுகிறார்கள் என்பது தெரிகின்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.