மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவருக்கு விளக்கமறியல் நீடிப்பு
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகனை எதிர்வரும் 09 ம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் கருப்பையா ஜீவராணி இன்று(26) காணொளி மூலம் உத்தரவிட்டுள்ளார்.
இணையத்தளங்களில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் படங்களைப் பதிவு ஏற்றியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கடந்த மே மாதம் 3ம் திகதி தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகனை ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைக்கப்பட்ட நிலையில் பொலிஸ் நிலையத்தில் வைத்து ஏறாவூர் பொலிஸார் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவரை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் முன்னிறுத்தியதையடுத்து அவர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் கருப்பையா ஜீவராணி
முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது கோவிட் காரணமாக
நீதிமன்றத்துக்கு அழைத்து வரமுடியாத காரணத்தினால் காணொளி மூலம் அவரை தொடர்ந்து
எதிர்வரும் பெப்ரவரி 9 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான்
உத்தரவிட்டுள்ளார்.