பேர்ல் கப்பல் தீ விபத்து பாதிப்புகளால் 200 கடல் வாழ் உயிரினங்கள் பலி
எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 176 க்கும் மேற்பட்ட ஆமைகள், 20 டொல்பின்கள் மற்றும் 4 திமிங்கலங்கள் உயிரிழந்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இதனை அறிவித்துள்ளது.
இதேவேளை, ஏற்பட்ட பாதிப்புகளுக்காக, எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலின் உரிமையாளர்கள் இலங்கைக்கு இடைக்கால இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளனர்.
எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸ் நிறுவனத்தின், கொள்கலன் கப்பலான எக்ஸ்-பிரஸ் பேர்லின் இயக்குனர்கள் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடாக 700 மில்லியன் ரூபாவை இடைக்கால இழப்பீடாக வழங்க இணங்கியுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
கடந்த மாதம் கொழும்பு கடலில் ரசாயனங்களுடன் சரக்குகளை ஏற்றிச் சென்ற எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டது.
இதன்போது சரக்குகளுடன் கூடிய எட்டு கொள்கலன்கள் கடலில் வீழ்ந்தன, அதன் பின்னர் குப்பைகள் மற்றும் பொதிகள் கொழும்பு முதல் நீர்கொழும்பு வரையான கரையோரத்தில் கரை ஒதுங்கியுள்ளன.
கப்பல் இறுதியில் இலங்கை நீரில் மூழ்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.