இரு இலங்கை பிரதிநிதிகள் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
இதற்கமைய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதிகள் இருவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பு
இலங்கை கடற்பரப்பை மாசுபடுத்தியமை உள்ளிட்ட 08 குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மிலிந்த ஹெட்டியாராய்ச்சி மற்றும் இந்திரஜித் ஹெட்டியாராய்ச்சி ஆகிய இருவருக்கு எதிராகவே இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்தின் உள்ளூர் முகவர் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் உள்ளிட்ட பிரதிவாதிகள் 08 பேருக்கு எதிராக கடல்சார் சூழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை
இந்த வழக்கு இன்று (21.01.2023) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இருப்பினும் விசாரணையின் போது பிரதிவாதிகள் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
இந்தநிலையில், இவர்கள் இருவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதம மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த பிடியாணை பிறப்பித்துள்ளார்.
கடந்த வருடத்தின் மத்திய பகுதியில் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே இரசாயனங்கள் அடங்கிய கொள்கலன்களுடன் சரக்குகளை ஏற்றிச்சென்ற போது தீப்பிடித்தமை குறிப்பிடத்தக்கது.
