எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் பேரழிவு: ஊழல்கள் குறித்து ஆராயவுள்ள அரசாங்கம்
எக்ஸ்-பிரஸ் பேர்ல் பேரழிவு தொடர்பான வழக்கு விசாரணை குறித்து ஆராய குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த, 2021இல் கொழும்பு கடலில் ஏற்பட்ட இரசாயனக் கப்பலான எக்ஸ்-பிரஸ் பேர்லின் தீப்பரவல் மற்றும் கடலில் மூழ்கிய சம்பவம் காரணமாக இலங்கைக்கு பாரிய கடல்சார் பேரழிவு ஏற்பட்டது.
இலங்கையின் உணர்திறன் வாய்ந்த கடலோர சூழல், உள்ளூர் சமூகங்கள் மற்றும் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை அது ஏற்படுத்தியது.
இழப்பீடு
இதனையடுத்து, அப்போதைய அரசாங்கம் சிங்கப்பூரில் கப்பல் நிறுவனத்திடமிருந்து 6.4 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கோரி சட்ட நடவடிக்கையை ஆரம்பித்தது.
எனினும், பிரதிவாதி தரப்பு ஐக்கிய இராச்சியத்தில் உள்ள மற்றொரு நீதிமன்றத்தில் இந்தக் கோரிக்கையை சவால் செய்ததால், இந்த செயல்முறை இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த வழக்கு விடயத்தில், சாத்தியமான ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. எனவே அவற்றை விசாரணை செய்ய, குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
