இழப்பீடாக 3 பில்லியன் டொலர்களை இழக்கும் அபாயத்தில் இலங்கை
இலங்கை எதிர்கொண்ட எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் பேரழிவால் ஏற்பட்டுள்ள, சுற்றுச்சூழல் பாதிப்புகளை விபரிக்கும் நிபுணர் குழுவால் தொகுக்கப்பட்ட இறுதி அறிக்கையை மூன்று வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம், நீதி அமைச்சகம் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த காலக்கெடுவுக்குள், அறிக்கையை சமர்ப்பிக்காது விட்டால், இழப்பீடான 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை இழக்கும் அபாயம் உள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இந்த வாரம் நாடாளுமன்றத்தில், நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தலைமையில், நீதி அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சுற்றுச் சூழல் ஆணையக பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

கடல்சார் பேரழிவு தொடர்பான அறிக்கை
இலங்கையின் மிக மோசமான கடல்சார் பேரழிவு தொடர்பாக, நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிக்கை தேவை என்று அமைச்சர் ராஜபக்ச கூறியுள்ளார்.
முன்னதாக சுற்றுச்சூழல் ஆணையகம், கடந்த செப்டம்பர் 19க்குள், குறித்த
அறிக்கையை நீதி அமைச்சகத்திடம் ஒப்படைக்க ஒப்புக்கொண்டது, ஆனால் இந்த
காலக்கெடுவை தவறவிட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த வாரம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது, ஜனவரி நடுப்பகுதிக்குள் அறிக்கையை ஒப்படைக்கலாம் என ஆணையக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆணையகம், இறுதி அறிக்கையை நீதியமைச்சகத்திற்கு அனுப்பாமல் முதலில் சட்ட ஆலோசகராக பணியமர்த்தப்பட்ட அவுஸ்திரேலிய நிறுவனத்திற்கு அனுப்பியது குறித்தும் நீதி அமைச்சர் இந்த வார கூட்டத்தின் போது தமது எரிச்சலை வெளிப்படுத்தினார்.
சட்ட நடவடிக்கைகள்
அறிக்கை முதலில் நீதி அமைச்சகத்திற்கு வந்திருக்க வேண்டும். பின்னர் அது சட்டமா துறைக்கு அனுப்பப்பட வேண்டும். அதுதான் செயல்முறையாக இருக்கும்.
எனினும் இந்த அறிக்கையை முதலில் வெளிநாட்டு சட்ட நிறுவனத்திற்கு அனுப்பி பரிந்துரைகளைக் கேட்பது மிகவும் சந்தேகத்திற்குரியது மற்றும் இது வேண்டுமென்றே தாமதப்படுத்தும் தந்திரம் என்ற கவலையை ஏற்படுத்துகிறது என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்ட நடவடிக்கையை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டால், 3 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கோருவதற்கான வாய்ப்பை இலங்கை இழக்க நேரிடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

இதேவேளை, இந்த கூட்டத்தில் கருத்துரைத்த, சுற்றுச்சூழல் ஆணையகத்தின் தலைவி தர்ஷனி லஹந்தபுர, சிங்கப்பூர்க் கொடியுடன் சென்ற கப்பல் மூழ்கியதால் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து அவுஸ்திரேலிய சட்ட ஆலோசகரிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை விரிவானது என குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பாலான குப்பைகள் தொடர்ந்து கடலுக்கு அடியில் உள்ளன. இடிபாடுகளை அகற்றுவதற்கான மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
எனவே சிதைவு முழுமையாக அகற்றப்படும் வரை சேதம் குறித்த இறுதி அறிக்கையை
சமர்ப்பிக்க முடியாது என்பதே தமது மதிப்பீடாகும் என்று அவர் தெரிவித்தார்.