நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை மீட்க ஏற்றுமதி பொருளாதாரம் ஒன்றே தீர்வு: நந்தலால் வீரசிங்க
நாட்டின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சியை மீட்க ஏற்றுமதி பொருளாதாரம் ஒன்றே தீர்வாக அமையும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இளம் தொழில்முனைவோர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று(28) நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “தற்போது ஏற்றுமதித்துறை சார்ந்த தொழில்கள் மட்டுமே கூடிய மற்றும் நிலையான வருமானத்தைத் தரும். மற்றைய தொழிற்துறைகள் அனைத்தும் மிக விரைவில் பாரிய வீழ்ச்சியை சந்திக்கும்.
ஏற்றுமதி பொருளாதாரம் பற்றிய ஆளுநரின் கருத்து
இந்த சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெற்று நாட்டை மீண்டும் ஓரளவு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தாலும் அது நீண்ட காலம் நிலைக்க போவதில்லை. மிக விரைவில் மீண்டும் பொருளாதார நெருக்கடி உருவாகும்.
அதனைத் தடுக்க எமது தொழில் முயற்சிகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் ஆரம்பம் முதல் ஏற்றுமதி பொருளாதாரத்தை இலக்கு வைத்துச் செயற்பட்டமையின் காரணமாகவே வளர்ச்சியடைந்த நாடுகளாக மாறியுள்ளன.
அண்மைக்காலமாக தாய்வான், வியட்னாம் மற்றும் பங்களாதேஷ் என்பன அதே வழியைப் பின்பற்றி வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளன.
இலங்கையும் அவ்வாறு செயற்பட்டால் மாத்திரமே தற்போதைய பொருளாதார வீழ்ச்சியில் இருந்து விடுபடவும், இன்னொரு பொருளாதார வீழ்ச்சியில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் முடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.