கிளிநொச்சியில் கமக்கார அமைப்பின் பிரதிநிதிகளை தாக்கிய சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்
கிளிநொச்சி - முரசுமோட்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை பகல் முரசுமோட்டை மற்றும் மருதன்குளம் ஆகிய பகுதியில் தொடரும் சட்டவிரோத மணல் அகழ்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் செயற்பட்ட கமக்கார அமைப்பின் பிரதிநிதிகளைத் தாக்கியமை மற்றும் அன்றையதினம் இரவு கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்குச் சொந்தமான வர்த்தக நிலையத்தின் கதவு மற்றும் பொருட்களுக்குச் சேதம் விளைவித்தமை ஆகிய சம்பவங்களுடன் தொடர்புபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு நேற்று முன்தினம் கைது செய்த சந்தேகநபருக்கெதிராக கிளிநொச்சி பொலிஸார் மூன்று வழக்குகளைப் பதிவு செய்தனர்.
அதற்கமைய நேற்று பிற்பகல் குறித்த சந்தேக நபர் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது அவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் இச்சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்கள் நேற்று மாலை தாமாகவே முன்வந்து சரணடைந்த நிலையில் அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இவ்விருவரும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.