கிளிநொச்சி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம்: யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விளக்கம் (PHOTOS)
கிளிநொச்சி வளாக தொழில்நுட்ப பீடத்தில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கும் எமக்கும் தொடர்பில்லை என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தொழில்நுட்ப பீடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பான தெளிவுபடுத்தல் எனும் தலைப்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
இன்று 18.08.2022 யாழ்.பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாக தொழில்நுட்ப பீடத்தின் கட்டடத்திறப்பு விழாவிற்கு வருகை தந்திருந்த குழுவினருக்கு எதிராக அங்கு கல்வி கற்கும் குறிப்பிட்ட ஒரு சில மாணவர்களினால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கும் தொழில்நுட்ப பீட மாணவர் ஒன்றியத்திற்கும் எந்தவித தகவல்களும் அவ் மாணவர்களினால் தெரியப்படுத்தாத நிலையிலே ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சிலரது அரசியல் சுயலாபத்திற்காக முன்னெடுக்கப்பட்ட ஒரு ஆர்ப்பாட்டமாகவே இது காணப்படுகின்றது. நடந்த இப்போராட்டத்திற்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதனை இங்கே உறுதியாகக் கூறிக்கொள்ளுகின்றோம்.
மேலும் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்ட மாணவர்களினால் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. அவர்கள் முன்வைத்த கோரிக்கையானது மாணவர் ஒன்றியத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு அக்கோரிக்கையானது நியாயமானதாக இருந்தால் கண்டிப்பாக அதை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.
மேலும் இவ்வாறான தவறுகள் எதிர்வரும் காலங்களில் தவிர்க்கப்பட வேண்டும் என்பதையும் தீர்க்கமாக கூறிக்கொள்கின்றோம் என்றுள்ளது.
மேலதிக தகவல் - தீபன்
முதலாம் இணைப்பு
யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தொழில்நுட்ப பீடத்தின் புதிய கட்டட திறப்பு விழா நிகழ்வில் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தொழில்நுட்ப பீடத்தின் புதிய கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது கட்டடமானது முழுமையாக பூரணமடையாத நிலையில், இது ஒரு அரசியல் நோக்கத்திற்காக திறந்து வைக்கப்படுவதாக தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல்கலைகழக வளாகத்திற்குள் அரசியல் தலையீடுகள் இடம்பெறக்கூடாது. பல்கலைக்கழகத்தின் கட்டடத்தொகுதி வேலைகள் நிறைவடையாமலே அவசர அவசரமாக திறக்கப்பட்டதை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் போராட்டத்தில் கலந்துக்கொண்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.