கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி : துப்பாக்கிச்சன்னம் உட்பட ஐந்து மனித எச்சங்கள் மீட்பு (Photos)
மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்படும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வில் ஐந்து மனித எச்சங்கள் முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளதுடன் துப்பாக்கி சன்னங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வு பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு இன்றையதினம் (22.11.2023) மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்றிருந்தது.
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த செப்டெம்பர் மாதம் 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு செப்ரெம்பர் 15 ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தது.
மீட்கப்பட்ட இலக்கத்தகடு
இந்த அகழ்வு பணியில் இன்றுடன் 24 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையிலும், துப்பாக்கி சன்னங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்தும் இலக்க தகடு, உடைகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை நேற்றையதினம் மீட்கப்பட்ட இலக்கத்தகட்டில் த.வி.பு - இ0043, O+ எனவும் மற்றுமொரு குறியீடும் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த அகழ்வு முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ, தடயவியல் பொலிஸார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |