படுகொலைகளுக்கான ஆதாரங்களை ஐ.நாவில் சமர்ப்பிக்கவுள்ளேன்! - கண்டியைச் சேர்ந்த நபர் யாழில் போராட்டம்
யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்கா முன்றலில் கண்டியைச் சேர்ந்த டீமன் ஆனந்த என்பவரால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என கோரி போராடும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு இந்த அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் மேற்கொள்ளப்படுவதாக தெரியவருகிறது.
இந்த சந்தர்ப்பத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் குறிப்பாக வடக்கில் பல இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் இந்த அரசாங்கம் உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.
கடத்தல்கள், படுகொலைகள் என்பவற்றில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் என்னிடம் பல ஆதாரங்கள் உள்ளன, அந்த ஆதாரங்களை ஜெனிவாவிலும் சமர்ப்பிக்க உள்ளேன்.
எதிர்கால இளைய சமுதாயத்திற்கு கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களின் உண்மைத்தன்மை தெரியப்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற காணாமலாக்கப்பட்ட உறவுகள் சில காலங்களில் இறந்து விடுவார்கள்.
ஆனால் எதிர்கால சந்ததியினருக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டார்கள், எதற்காக அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்ற உண்மை தெரியப்படுத்தப்பட வேண்டும்.
அத்தோடு படுகொலைகள் மற்றும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் தற்பொழுது நாடாளுமன்றத்திலும், மாகாணசபைகளிலும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்களை கண்டறிந்து கைது செய்ய வேண்டும்.
அதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளார். வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு நீதி வேண்டும். எனினும் நான் தமிழ் மக்களுக்கு எதிராக இந்த போராட்டத்தில் ஈடுபடவில்லை.
இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் உண்மை விடயம் தொடர்பில் சரியான தெளிவுபடுத்தல் வேண்டும் என்பதற்காகவே நான் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். இந்த போராட்டம் தமிழ் மக்களுக்கு எதிரான போராட்டம் என நினைக்காதீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இவ்வாறு படுகொலைகள் தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அதனை ஜனாதிபதியிடம் தெரிவிப்பதற்கு நான் ஜனாதிபதியை சந்திப்பதற்கு கோரியிருந்த போதிலும் இன்றுவரை எனக்கு அந்த சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
எனவே அதனை நான் எதிர்பார்க்கின்றேன். எனினும் ஐ.நா சபையில் இந்த கடத்தல் படுகொலைகள் தொடர்பான ஆதாரங்களை சமர்பிக்க உள்ளேன் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.