மாலைத்தீவு ஜனாதிபதியை வரவேற்கும் நிகழ்வு ஆரம்பம்
இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கையை வந்தடைந்த மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முயிசுவை வரவேற்கும் உத்தியோகபூர்வ அரச விழா தற்போது ஆரம்பமாகியுள்ளது.
மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார்.
ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர், மொஹமட் முயிசு இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது ராஜதந்திர விஜயம் இதுவாகும்.
விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்! படையெடுக்கும் முக்கிய அதிகாரிகள் - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் வருகை தரும் மாலைதீவு ஜனாதிபதி, எதிர்வரும் 06ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு
இந்த விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் அவர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் 06 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இந்த விஜயத்தின் போது கையெழுத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதலாம் இணைப்பு
மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு, இரண்டு நாள் அரச பயணம் மேற்கொண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இலங்கையை வந்தடைந்தார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரிலேயே இவ்விஜயம் இடம்பெறுகின்றது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினரை, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அமோகமாக வரவேற்றார்.
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன, வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இலங்கை விமானப் படையினரால் மாலைதீவு ஜனாதிபதிக்கு இதன்போது விசேட மரியாதை வழங்கப்பட்டதுடன், அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சிறுவர், சிறுமியர் இரு நாடுகளினதும் தேசிய கொடிகளை ஏந்தியவாறு வீதியின் இருமருங்கிலும் நின்று மாலைதீவு ஜனாதிபதியை வரவேற்றனர்.
மாலைதீவு – இலங்கை இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 61 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்த விஜயத்தை முன்னிட்டு, மாலைதீவு ஜனாதிபதி விமான நிலையத்தின் விசேட விருந்தினர் பகுதியில் உள்ள நினைவுப் புத்தகத்தில் குறிப்பொன்றையும் இட்டார்.
ஜனாதிபதி முகமது முய்சு, 2023 ஆம் ஆண்டு பதவியேற்றதன் பின்னர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும். மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று திங்கட்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து மாலைதீவு ஜனாதிபதி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இருதரப்பு பேச்சுகளை நடத்தவுள்ளார். பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான இரு நாடுகளினதும் பொதுவான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில், இந்த விஜயத்தின் போது பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.
மேலும், மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர், கொழும்பில் நடைபெறவுள்ள விசேட வர்த்தக சந்திப்பிலும் கலந்துகொள்ளவுள்ளனர். ஜனாதிபதி முய்சுவுடன் அவரது பாரியார் சாஜிதா முகமது மற்றும் மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் உட்பட சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் இந்த விஜயத்தில் இணைந்துள்ளனர்.
செய்தி - ராகேஷ்




