பருத்தித்துறை வைத்தியசாலையின் பௌதீகவள கட்டிடத்தொகுதி நிர்வாகத்திடம் கையளிப்பு
யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் யாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் எற்பாட்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நோயாளர்களின் நலன் கருதி உடற்பயிற்சி சிகிச்சைக்கான பௌதீகவள கட்டிடத்தொகுதியினை வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் விடுதியில் வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வே.கமலநாதன் தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.கேதீஸ்வரன் மற்றும் தியாகி அறக்கொடை நிலையத்தின் தலைவர் வாமதேவா தியாகேந்திரன் ஆகியோர்கள் கலந்துகொண்டு பௌதீகவள கட்டிடத்தொகுதியினை கையளித்துள்ளனர்.
இதற்காக 8.3 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட சிகிச்சைப்பிரிவுக்கான கட்டிடத்தொகுதி விடுதியாகக் காணப்படுகின்றது.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் திட்டமிடல் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.மோகனகுமார், மற்றும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள், சிகிச்சை நிபுணர்கள், தாதியர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் நிதியுதவியினை வழங்கிய நன்கொடையாளர் வாமதேவா தியாகேந்திரனுக்கான கௌரவிப்பும் இதன்போது இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது