பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள ஏறாவூர் வன்முறை சம்பவம்: பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு (Photos)
மட்டக்களப்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட்டின் அலுவலகம் மற்றும் அவரின் உறவினர்களின் வர்த்தக நிலையம் என்பன நேற்றிரவு எரிக்கப்பட்டு அவருக்கு எதிராக மக்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தற்போது பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.
நேற்று இரவு ஏறாவூர் பிரதான வீதியில் உள்ள உள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட்டின் அலுவலகத்தினை முற்றுகையிட்ட பெருமளவான பொதுமக்கள் குறித்த அலுவலகத்தினை தீவைத்து எரித்தனர்.
அதனை தொடர்ந்து அதற்கு அருகில் உள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சரின் சகோதரனின் வர்த்தக நிலையமும் அடித்து உடைக்கப்பட்டு தீயிட்டு கொழுத்தப்பட்டன.
அத்துடன் வீதிகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட்டின் பதாகைகளும் உடைக்கப்பட்டு தீயிட்டு கொழுத்தப்பட்டதுடன், அவருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் பொலிஸார் குவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் நிலைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், மேலதிக இராணுவத்தினரும் அழைக்கப்பட்டு பாதுகாப்பினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் வகையில் பொலிஸாரினால் கண்ணீர்புகைக்குண்டு தாக்குதல்களும் முன்னெடுக்கப்பட்ட நிலையில், மேலதிக கலகம் அடக்கும் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டு இன்று அதிகலை ஏறாவூர் நகரின் பாதுகாப்பு முழுமையாக கட்டுப்படுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.