தேசிய மாநாட்டுக்குத் தயாராகுங்கள்! ஈ.பி.டி.பி. கட்சியின் உறுப்பினர்களிடம் தலைவர் டக்ளஸ் வேண்டுகோள்
தேசிய மாநாட்டை நடத்தி கட்சியை எழுச்சி கொள்ள வைப்பதற்குத் தயாராகுமாறு கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, "எம் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான உண்மைகளை எதிர்காலம், நாம் நேசிக்கின்ற மக்களுக்கு வெளிப்படுத்தும்" என்றும் தெரிவித்துள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். தலைமையகத்தில் இன்று(25) நடைபெற்ற கலந்துரையாடலில், அண்மையில் இடம்பெற்ற தன்னுடைய கைது மற்றும் சமகால அரசியல் தொடர்பாக கட்சி செயற்பாட்டாளர்களுக்கு தெளிபடுத்தும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
போதிய அரசியல் பலம்
மேலும், மாற்றம் பற்றிய எதிர்பார்ப்புடன் வாக்களித்த மக்களுக்கு இதுவரையில் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாத நிலையே தொடருகின்ற போதிலும், பல்வேறு சவால்கள் மிகுந்த சூழலில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள அரசுக்கு இன்னும் கால அவகாசம் வழக்க வேண்டும் என்பதே நியாயமான நிலைப்பாடாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

"எந்தவொரு அரசும் தமிழ் பேசும் மக்களுக்கு எதையும் தாம்பாளத் தட்டில் ஏந்தி வந்து தாமாகத் தரப்போவதில்லை. எமது நண்லெண்ண சமிஞ்ஞையாலும் சிநேகபூர்வ உரையாடலாலும் தேசிய நல்லிணக்க வழிநின்றே நாமே எதையும் பெற வேண்டும். கடந்த கால அரசுகளும் நாம் கேட்டதற்கிணங்கவே பலவற்றுக்கும் தீர்வு தந்தார்கள். கடந்த காலங்களில் போதிய அரசியல் பலம் எமக்கு இருந்திருந்தால் முழுமையாக எதையும் பெற்றிருக்கலாம்.
கடந்த கால அரசுகளோடு நாம் ஆட்சிகளில் பங்கெடுத்திருந்தாலும் அவர்களோடும் எமக்கு முரண்பாடுகள் இருந்தன. ஆனாலும் பேசித் தீர்ப்பதற்கு ஒரு தளம் இருந்தது. நாம் ஆட்சிகளில் பங்கெடுத்தமையே அந்தத் தளம்.
கடந்த கால அரசுகளைப் போலவே இந்த ஆட்சியோடும் எமக்கு முரண்பாடுகள் உள்ளன. ஆனாலும் எதிர்ப்பு அரசியல் நடத்துவோரைப் போல் நாமும் அரசைக் கடும்போக்கில் விமர்சிக்க முடியாது.
தமிழ் எம்.பிக்கள்
இந்த அரசும் தமிழ் பேசும் மக்களுக்கு எதையும் தரவில்லையென்றால் அதற்கு இந்த அரசு காரணம் என்று கூறிவிட முடியாது. கடந்த கால அரசுகளோடு நாம் எவ்வாறு கேட்டுப் பெற்றோமோ, அதுபோலவே இந்த அரசுடனும் பேசியே பெற வேண்டும்.
ஆளும் கட்சி சார்ந்த தமிழ் எம்.பிக்கள் அரசுக்குள் கரைந்தேபோயுள்ளனர். அவர்களுக்கு அந்த ஆற்றல் அனுபவம் அக்கறை கிடையாது.

அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள்ளேயே ஆளும் கட்சி தமிழ் எம்.பிக்கள் தவிர்க்க முடியாமல் நிற்பார்கள். ஆகவே, நாமே அரசுடன் பேச வேண்டும். அதற்கு எமக்குப் பிரதிநித்துவம் இல்லை. அரசோடு பேச வல்ல அதிகாரம் இல்லை.
எதிர்காலத்தில் எமது மக்கள் அந்த ஆணையை வழங்கும் பட்சத்தில் இந்த அரசுடனும் நாம் எதையும் பேசித் தீர்க்கும் தளம் உருவாகும் என்று தெரிவித்தார்.
மேலும், கட்சியின் தேசிய மாநாட்டை நடத்தி கட்சி கட்டமைப்புக்களை சீராக்குவதுடன் எங்களுடைய பலவீனங்களை அடையாளப்படுத்திச் சீர்செய்வதன் மூலம் கட்சியை எழுர்ச்சி கொள்ள வைக்க முடியும். அதற்காக அனைத்து உறுப்பினர்களும் ஆத்மார்த்தமாக உழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.






