மீண்டும் வெடிப்பு! கீழிறங்கும் கொடுக்குளாய் அபாய வெளியேற்ற பாதை
பல மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கொடுக்குளாய்-இயக்கச்சி அபாய வெளியேற்றப் பாதை வெடிப்பு விழுந்து கீழ் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடுக்குளாய் அபாய வெளியேற்ற பாதை ஆசிய வங்கியின் நிதி உதவியுடன் பல மில்லியன் கணக்கான நிதியில் கடந்த சில மாதமாக புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது.
குறித்த வீதி புனரமைப்பு பணிகள், முடிவு நிலையை எட்டிய நிலையில் புனரமைப்பு செய்யப்பட வீதி வெடிப்பு விழத் தொடங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மீண்டும் இறங்கிய பாதை
இதன்படி, சில இடங்களில் அதிகமாக வெடிப்பு விழுந்து வீதி கீழ் இறங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
வடமராட்சி கிழக்கு மக்களினுடைய முக்கிய அபாய வெளியேற்றப் பாதையாக காணப்படும் குறித்த வீதியை, புனரமைப்பு செய்து தருமாறு பல வருடங்களாக மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த வீதி புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

ஆனாலும் வீதிப் பணிகள் முடிவுறும் தருவாயில் போடப்பட்ட வீதி மீண்டும் வெடிப்பு விழுந்து கீழ் இறங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.