எரிவாயு சிலிண்டர் வெடிப்பு பற்றி நாளை அவசர ஆலோசனை உப குழுக்கூட்டம்
எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக நாளை புதன்கிழமை காலை 9 மணிக்கு அவசர ஆலோசனை உப குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன(Mahinda Yapa Abeywardana) சபையில் அறிவிப்பை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்குச் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ(Sajith Premadasa), எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு தொடர்பில் கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவிடம்(Lasantha Alagiyawanna) கேள்விகளை எழுப்பினார்.
இதற்குக் கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண பதிலளித்த நிலையில் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக அவசர ஆலோசனை உப குழுக் கூட்டத்தைக் கூட்டிடலாம் என்ற யோசனை சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தனவால் முன்வைக்கப்பட்டது.
இதையடுத்தே எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக நாளை புதன்கிழமை காலை 9 மணிக்கு அவசர ஆலோசனை உப குழுக் கூட்டத்தைக் கூட்டுமாறு சபாநாயகர் அறிவித்ததுடன் இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.
இதேவேளை, எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பது தொடர்பில் அவசர ஆலோசனை உப தெரிவுக்குச்
செயற்குழு ஒன்றையும் அமைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ
கோரிக்கை விடுத்தார்.