கொழும்பு உட்பட 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை! (video)
இம்மாதத்தில் இதுவரையில் 5,500 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மொத்த நோயாளர்களின் 60% மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.
காலி மற்றும் குருநாகல் பிரதேசங்களிலும் கணிசமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மேலும் , கிண்ணியா, மூதூர், இரத்தினபுரி, எஹலியகொட, எம்பிலிப்பிட்டிய, பலாங்கொடை, புத்தளம், மஹவெவ, வென்னப்புவ, சிலாபம், கல்பிட்டி, நாத்தாண்டிய, மாத்தறை, மொரவக, மன்னார், குருநாகல் மற்றும் வாரியபொல ஆகிய பிரதேசங்கள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாடு மய்யம் தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
2021 செப்டம்பர் மாதம் முதல் 2022 ஜனவரி மதம் வரை டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில் 1,370, ஒக்டோபர் மாதத்தில் 2,979, நவம்பர் மாதத்தில் 4,561, டிசம்பர் மாதத்தில் 8,096 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
உலகளவில் ஒவ்வொரு வருடமும் 400 மில்லியன் டெங்கு நோய் தொற்றாளர்கள் பதிவாவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே நீங்களும் எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் வசிக்கும் உங்கள் இடங்களை தினம்தோறும் சுத்தம் செய்து நீர் தேங்கி டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை அழித்துவிடுங்கள்.
நுளம்பு கடியைத் தவிர்க்க, கொசுவலைகள், நீண்ட ஆடைகள், கொசு விரட்டிகள், சுருள்களை பயன்படுத்துங்கள். மேலும் காய்ச்சல் / தலைவலி / மூட்டு வலி / வாந்தி,சோர்வு, கண்களுக்குப் பின்னால் வலி, 2 நாட்களுக்கு மேல் நீடித்தால் உடனே மருத்துவரை அணுகவும்.