இலங்கை மக்கள் முன் கூட்டியே தயாராக இருக்கும் வகையிலான சந்தர்ப்பம்! அமைச்சர் வெளியிட்ட தகவல்
மின்சார விநியோகம் சம்பந்தமாக தற்போது நெருக்கடி இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்வதாகவும் மின்சார சபை முன்வைத்துள்ள கால அட்டவணைக்கு அமைய அடுத்த 10 நாள் காலத்தில் சில நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்படலாம் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன (Ramesh pathirana) தெரிவித்துள்ளார்.
தேவைக்கு அமையவாக இந்த மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
மக்கள் முன் கூட்டியே தயாராக சந்தர்ப்பத்தை வழங்கும் வகையிலேயே மின்சார சபை மின் துண்டிப்பு தொடர்பான திட்டத்தை முன்வைத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் ரமேஷ் பத்திரன இதனை கூறியுள்ளார்.
மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தடையேற்படாத வகையில் மின்சார விநியோகத்தை முகாமைத்துவம் செய்யுமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட துறையினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
தற்போது செயலிழந்துள்ள நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை மீண்டும் இயக்குவது மேலும் 9 முதல் 10 நாட்கள் வரை செல்லும் என மின்சார சபை அறிவித்துள்ளது.
அந்த மின் உற்பத்தி நிலையம் வழமைக்கு திரும்பிய பின்னர், அதாவது எதிர்வரும் 20 ஆம் திகதியின் பிறகு பிரச்சினை பெரும்பாலும் தீர்க்கப்பட்டு விடும் எனவும் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டுள்ளார்.