மின்சார நெருக்கடி:வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையத்தள வசதிகளிலும் பாதிப்பு
மின் விநியோக பிரச்சினை காரணமாக தொலைபேசி அலைவரிசை கோபுரங்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்களின் ஒளி மற்றும் ஒலிப்பரப்பு நடவடிக்கைகளுக்கு தடையேற்பட்டுள்ளன.
மின்சாரம் துண்டிக்கப்படும் நேரங்களில் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்களில் நிகழ்ச்சிகளை ஒளி, ஒலிப்பரப்ப டீசல் மின் பிறப்பாக்கி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
எனினும் தற்போது மின் பிறப்பாக்கி இயந்திரங்களுக்கு தேவையான டீசலை பெற்றுக்கொள்ள முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் இந்த நிலைமை உருவாகியுள்ளது.
சில இலத்தரனியல் ஊடகங்கள் 24 மணி நேர ஒளி, ஒலிப்பரப்புகளை இடைநிறுத்தியுள்ளன. இது தொடர்பாக சில வானொலி நிலையங்கள், ஊடகத்துறை அமைச்சருக்கு தெரியப்படுத்தியுள்ளன.
இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபனம் நான்கரை மணி நேர மின் துண்டிப்பை எதிர்நோக்கினால், மின் பிறப்பாக்கி இயந்திரங்கள் மூலம் மின்சாரத்தை பெற மாதம் ஒன்றுக்கு ஒரு லட்சம் லீற்றர்களுக்கும் மேல் டீசல் தேவைப்படும் என அதன் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
தொலைபேசி அலைவரிசை கோபுரங்கள் மின்சார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதால், இணையத்தள வசதிகளை ஒரே வேகத்தில் சீராக வழங்க முடியாத சவால் ஏற்பட்டுள்ளது.