அமெரிக்காவுடன் நெருங்கும் இலங்கை அரசு - வீதியில் இறங்கும் ஊழியர்கள்
யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்காவிற்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து துறைமுகங்கள் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களும் நாளை வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாளை பிற்பகல் 12 மணிக்கு கொழும்பில் உள்ள இலங்கை போக்குவரத்து சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக மின்சார பொறியியலாளர்கள் உட்பட நாடு முழுவதிலும் உள்ள மின் ஊழியர்கள் இணைந்து பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சபுகஸ்கந்த மற்றும் கொலன்னாவில் நான்கு இடங்களில் நாளை நண்பகல் 12 மணிக்கு துறைமுக அதிகாரசபையின் தலைமை அலுவலகம் முன்பாக பெற்ரோலிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.
கொழும்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் பின்னர் வேலை நிறுத்தம் நடைபெறும் திகதி தீர்மானிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆர்ப்பாட்டம் நடைபெறும் சந்தர்ப்பத்தில் மின்சாரம் தடைப்பட்டால் அதனை தாம் சரிப்படுத்தப்போவதில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.