அதிகாரம் வழங்கப்பட்டு இருந்தால் உரிய நேரத்தில் தேர்தலை நடத்த முடியும்: தேர்தல்கள் ஆணைக்குழு
தேர்தல்களை பிற்போடும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு மாத்திரமே இருக்க வேண்டுமெனவும் அவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு மாத்திரம் அதிகாரம் வழங்கப்பட்டு இருந்தால் உரிய நேரத்தில் தேர்தலை நடத்த முடியுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
திருகோணமலை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (19) அலுவலகத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை கோட்டையில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
அதன்பின் தேர்தல் ஆணைக்குழு அதிகாரியான எம்.எம். மொஹமட் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில்,
அதாவது 2020ஆம் டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இரண்டாவது தேர்தல் ஆணைக்குழுவில் ஐவர் கொண்ட ஆணைக்குழு இயங்கிவருகிறது. 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தல்கள் 2017 மற்றும் 2018 ஆண்டுகளில் நடாத்தப்படவிருந்தாலும் இதுவரை நடாத்தப்படாமலும் ஏற்கனவே கொண்டு வரப்பட்ட ஒரு சட்டத் திருத்தத்தை முறையாக நடைமுறைப்படுத்த முடியாமையினால் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் எங்களுக்குத் தெரியும். மாகாண சபைகள் இப்பொழுதும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதிகாரிகள் அந்த நிதி ஒதுக்கீடுகளைச் செலவிட்டு மாகாண சபைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மாகாண சபைகளில் இல்லாதவர்கள் மக்கள் பிரதிநிதிகள் மாத்திரமே, எனவே அந்த மக்கள் பிரதிநிதிகளை நியமனம் செய்கின்ற தேர்தல் ஒன்றை நடாத்தப்பட வேண்டும் என்பதில் தேர்தல் ஆணைக்குழு மிகுந்த கரிசனை கொண்டு இருக்கிறது.
எனவே தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணைக்குழு கேட்டுக்கொள்கின்றோம் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுக்கின்றது. அதேபோன்று கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பதவிக்காலம் எதிர்வரும் 2022 மார்ச் மாதம் 20 ஆம் திகதி முடிவடைய இருக்கிறது.
அதற்கு முன்பு உள்ளூராட்சி சபைத் தேர்தலையும் நடத்த வேண்டியிருக்கிறது. எனவே உள்ளூராட்சி சபைத் தேர்தலையும் நடத்த வேண்டிய நிலைக்குத் தேர்தல் ஆணைக்குழு தள்ளப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு அவதானித்த ஒரு முக்கியமான விடயம் ஒரு தேர்தலை ஒத்திவைக்கின்ற பொறுப்பு,கடமை அல்லது அதற்குரிய அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கையளிக்கப்பட வேண்டும் என்பது தேர்தல்கள் ஆணைக்குழுவில் கருத்தாகும்.
ஏனென்றால் உள்ளூராட்சி சபைத் தேர்தலை எடுத்துக்கொண்டால் உள்ளூராட்சி சபை தேர்தலில் புதிய பதவிக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்பு அந்த உள்ளூராட்சி சபை சட்டத்தின் கீழ் அந்த உள்ளூராட்சி சபைக்குப் பொறுப்பாக உள்ள அமைச்சருக்கு அந்தத் தேர்தலை ஒரு வருடத்திற்கு பிற்போடுவதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
எனவே இவ்வாறு வழங்கப்பட்ட அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட வேண்டும் என்பது தேர்தல் ஆணைக்குழுவைக் கருத்து. ஏதாவது ஒரு தேர்தலை பிற்போடுவதாயின் அதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட வேண்டும் ஏனைய அதிகாரங்களுக்கு வழங்கப்படக் கூடாது என்பது தேர்தல் ஆணைக் குழுவின் கருத்து.
ஏனென்றால் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய சந்தர்ப்பங்களிலும் சில தேர்தல்கள் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லாத காரணத்தினால் அவ் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படுகின்றன என்பது தேர்தல்கள் ஆணைக்குழுவின் கருத்து. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே சட்ட வல்லுநர்களுக்கு அறிவித்திருந்தோம். இந்த சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்ற பொழுது இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் ஜி புஞ்சிஹேவா இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான எஸ்.பி,திவரத்ன,எம்.எம்.முஹமட்,கே.பி.பி .பத்திரன மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





