வடக்கில் தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி
மன்னார் மாவட்டத்தில் நாளை செவ்வாய்க்கிழமை(6) இடம்பெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (5) மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வாக்களிக்க தகுதி
மன்னார் மாவட்டத்தில் 91 ஆயிரத்து 373 வாக்காளர்கள் இம்முறை வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
5 உள்ளூராட்சி மன்றங்களில் இருந்தும் 88 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். மன்னார் நகர சபையில் 18 உறுப்பினர்களும்,மன்னார் பிரதேச சபையில் 23 உறுப்பினர்களும்,நானாட்டான் பிரதேச சபையில் 19 உறுப்பினர்களும்,முசலி பிரதேச சபையில் 19 உறுப்பினர்களும்,மாந்தை மேற்கு பிரதேச சபையில் 24 உறுப்பினர்களும் உள்ளடங்களாக கட்சி மற்றும் சுயேற்சைக் குழு சார்பாக 103 உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர்.
அவர்களில் மன்னார் நகரசபைக்கு 15 உறுப்பினர்களும், மன்னார் பிரதேச சபைக்கு 20 உறுப்பினர்களும் ,நானாட்டான் பிரதேச சபைக்கு 16 உறுப்பினர்களும், முசலி பிரதேச சபைக்கு 16 உறுப்பினர்களும் ,மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு 21 உறுப்பினர்களுமாக மொத்தம் 88 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்" என கூறியுள்ளார்.
கிளிநொச்சி
நாளைய தினம் நடைபெவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்களுக்காக கிளிநொச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 108 வாக்களிப்பு நிலையங்களுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
நாளை நடைபெற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிளிநொச்சி மாவட்ட தேர்தல் செயலகத்தில் இருந்து 108 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப்பட்டிகள் இன்று காலை முதல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாவட்ட அரச அதிபர் குறிப்பாக சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டு வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப்பட்டிகளும் எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன மக்கள் நேர காலத்துடன் சென்று தங்களது வாக்குகளை அளிக்குமாறு தெரிவித்துள்ளதுடன் பொலிஸார் மற்றும் விசேட பாதுகாப்பு கடமைகளிலும் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
செய்தி - யது
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டத்தில் 1291 உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும், மாவட்ட செயலாளருமான அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று (05.05.2025) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், சுதந்திரமானதும், நேர்மையானதுமான தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்றும், முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய் , மாந்தை கிழக்கு ஆகிய நான்கு பிரதேச சபைகளுக்கான தேர்தலாக இது அமைவதுடன் 41 வட்டாரங்களை உள்ளடக்கி காணப்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்தி - ஷான்
வவுனியா
வவுனியா மாவட்டத்தில் 1605 உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும், அரச அதிபருமான பீ.ஏ.சரத்சந்திர தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுதந்திரமானதும், நேர்மையானதுமான தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. ஒரு மாநகரசபை மற்றும் நான்கு பிரதேச சபைகளுக்காக 103 பேர் தெரிவு செய்யப்பட்டவுள்ளனர்.
இதற்காக 1731 பேர் போட்டியிடவுள்ளனர். ஒரு இலட்சத்து 79 ஆயிரத்து 293 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்" என்றார்
செய்தி திலீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNELஇல் இணையுங்கள் JOIN NOW |