சிங்கள சாதிபேத அரசியல் போட்டிக்கு பலிக்கடாவாகும் ஈழத்தமிழினம்
இலங்கையில் சிங்கள பௌத்த சாதியத்தைப் பற்றிக் குறிப்பிடும் மிகவும் பழமைவாய்ந்த மானுடவியல் நூலான 'ஜனவங்சய'வில் 26 சாதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மத்தியகால இலங்கையில் இருந்ததாகச் சொல்லப்படும் சாதிகள் 17 ஐ ஜே.டி.லெனரோல் குறிப்பிடுகின்றார் என கட்டுரையாளர் தி.திபாகரன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது கட்டுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பேராசிரியர் நந்ததேவ விஜேசேகர எழுதிய 'இலங்கை மக்கள்' எனும் நூலில் 43 சாதிகளின் பட்டியலைக் குறிப்பிடுகிறார்.
இத்தகை பாகுபாடுகள் தமிழர் தரப்பிலும் உண்டெ ன்பது மறுப்பதற்கில்லை. சிங்கள சாதியம் குறித்து சிங்கள அறிஞர்களான நியூட்டன் குணசிங்கஇ அமுனுகம செனிவிரத்ன பறங்கி இனத்தவரான மைக்கல் ரோபோட்ஸ் போன்ற பல அறிஞர்கள் விரிவாக எழுதியுள்ளனர்.
இந்நூல்களுள் முக்கியத்துவமானது மைக்கல் றொபட்ஸ் அவர்களின் Caste conflict and elite formation: The Rise of a Karava elite in srilanka 1500-1931 என்ற நுாலாகும்.
இவர் தமிழர் மரபு வழி தாயகத்தை ஒரு ஐதீகம் என கூறியும் எழுதியும் வந்தவர். இதிலிருந்து மைக்கல் றொபேட்ஸ் போன்ற சிறந்த புலமையாளர்கள்கூட பெளத்த சிங்கள பேரினவாத மனநிலையிலிருந்து விடுபடவில்லை என்பதுவும், விடுபட முடியாது என்பதுவே யதார்த்தம்.
இத்தகைய சாதிய அடிப்படையிலான இலங்கையின் அரசியல் வரலாற்றை இன்று மேற்கத்தைய மற்றும் அண்டை நாடும் உணரத் தவறவில்லை தற்போது அதன் கூர்மையை அவர்கள் மேலும் உணர்கிறார்கள் என தெரிகிறது. அதனாலே தான் தற்போதைய மேற்குலகின் அரசியல் நிலைப்பாடு என்பது சஜித் பிரேமதாசவில் இருந்து மெல்ல மெல்லவிட்டு நழுவிச் செல்லும் போக்கினைக் கொண்டதாய்க் காணப்பட முடிகிறது.
கடந்த காலத்தில் ஏற்பட்டது போன்ற ஆட்சிமாற்றம் அல்லது மாற்று அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கான தலைவர் என்ற நிலையை சஜித் இழந்து வருகிறார் எனத் தெரிகிறது. அத்தோடு மேற்குலகம் வேறு ஒரு சிங்கள உயர்குழாத்து தலைமை ஒன்றை தேடுகின்றது என்பதும் அண்மைய காலத்தில் மேற்குலகின் இலங்கை தொடர்பான அரசியல் காய்நகர்த்தல்கல் இருந்து உணர முடிகிறது.
ராஜபக்சசேகளின் குடும்பத்தைச் சார்ந்த பொது ஜன பெரமுனவுக்கு எதிராக என்னதான் கூட்டுக்களை ஏற்படுத்தினாலும் சிங்கள பௌத்த சாதி அடிப்படையில் பலவீனமான இடத்தில் இருக்கும் சஜித் பிரேமதாச போன்றவர்களினால் முன்னிலை வகிக்க முடியாது என்பது உணரப்படுவதாகத் தெரிகிறது.
இதற்கு சிங்கள சமூகத்தின் சாதி முறைமை அல்லது சாதி ஒடுக்குமுறை ஒரு முக்கிய காரணமாகும். எனவே தான் சாதித் தட்டில் பலவீனமான சஜித் போன்றோரை முதன்மையாகக் கொண்ட இத்தகைய கூட்டுக்கள் இனி உதவாது என்பதையும் அது உடைந்துவிட்டது என்பதையும் உணர்த்தும் வகையில் மீண்டும் ரணில் அரசியலுக்குள் முதுகை நிமிர்த்த முயற்சிப்பதை வைத்துக்கொண்டு ஊகிக்க முடிகிறது.
அத்தோடு கடந்த சில வாரங்களாக மேற்குலகம் சார்ந்தவர்கள் ரணில் விக்கிரமசிங்காவை முக்கியத்துவப்படுத்தி அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு இருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
இந்த அரசியல் செந்நெறியின் அடிப்படையில் எதிர்காலத்தில் இலங்கை அரசியலில் சஜித் தலைமையிலான ஒரு அணி எப்போதும் இருக்கும். ஆனால் அது ஒரு சக்திவாய்ந்த தலைமைத்துவமுடைய அணியாக அமைய முடியாது.இனி ஒருபோதும் அவ்வாறு வளரப்போவதுமில்லை.
அதே நேரத்தில் சஜித் அரசியலில் இருந்து ஒருபோதும் ஒதுங்கி போகப்போவதுமில்லை. அவருடைய கட்சி இலங்கையைப் பொறுத்தளவில் இன,மத அடிப்படையிலான ஒரு கட்சியாகவே தொடர்ந்து இனங்காட்டப்படும்.
எனவே ஐக்கிய தேசியக் கட்சி தெளிவாக இரண்டு பிரிவாக பிரிந்த நிலையிலேயே இருக்கப் போகின்றது. இது எப்போதும் ராஜபக்சக்களின் பொதுஜன பெரமுனவுக்கு சாதகமானது தான்.
எனவே இந்தப் பின்னணியில் ஆட்சி மாற்றம் என்பது பொதுஜன பெரமுனவின் உள்ளிருந்துதான் வரவேண்டும். அதுவும் இவர்களுக்குள் உள்ளவர்களில் ஒருவரைத் தலைவராகக் கொண்டுதான் ஏற்படுத்தப்படலாமேயெழிய ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஏற்படுத்துவது என்பது இயலாத காரியமாகும்.
2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றங்கூட சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்த மைத்திரிபால சிறிசேனாவைத்தான் ஜனாதிபதியாக்க முடிந்தது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
யுத்த வெற்றிவாதத்தின் அடிப்படையில் ராஜபக்ச குடும்பம் , சுதந்திரக் கட்சியை,பொது ஜன பெரமுன என்ற இந்த மூன்று புள்ளிகளை இணைந்த ஒரு கையிற்தான் இலங்கையின் அரசியல் அதிகாரம் தொங்கிக் கொண்டிருக்கின்றது.
எனவே சாதி மத குடும்ப ஆதிக்க இனவாத இந்திய எதிர்ப்பை கொண்ட சிங்கள பௌத்த அரசியலில் இந்த மூன்று புள்ளிகளையும் இணைத்த இணைப்புக்கு வெளியே ஆட்சி மாற்றம் ஒன்றுக்கு சாத்தியமே இல்லை.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆளுமை அற்றவர். அதே நேரத்தில் சஜித் பிரேமதாச சாதி அடிப்படையில் இலங்கையின் அரசியல் இயங்கு தளத்தில் பலவீனமானவர்.
ஆனால் பொது ஜன பெரமுனவின் பலம் என்பது இந்திய எதிர்ப்புஇ தமிழின எதிர்ப்பு,சீன ஆதரவு குடும்ப இ சாதி ஆதிக்கம் என்ற அடித்தளத்திலிருந்து சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையின் முறுக்கேறிய திரட்சியாய் பௌத்த சிங்களவர்களின் ஆதரவுத் தளத்தில் நிமிர்ந்து நிற்பது தான்.
எது எப்படி இருப்பினும் எப்பாடுபட்டாவது பொது ஜன பெரமுனவுக்குள் பிரிவினைகளை ஏற்படுத்தி அவர்கயளுக்குள் உள்ள ஒருவரை தலைவராக முன்னிலைப் படுத்தினாலும் இறுதிக் கட்டத்தில் பொது ஜன பெரமுன வாதிகள் ஒரு குடைக்கீழ் ஒரு பக்கம் தான் போவார்கள். இத்தகைய ஆட்சிமாற்றம் தமிழர் பிரச்சினைக்கு ஒரு போதும் தீர்வாகாது.
அதேநேரம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்த நாடுகளின் நலன்களை பூர்த்தி செய்வதற்கு பயன்படுத்தலாமேயெழிய தமிழினப் படுகொலையையும,தமிழ் இன ஒடுக்கு முறையையும் இது தடுக்கவே தீர்த்து வைக்கவோ தமிழ் மக்களின் தேசிய அபிலாசையை நிறைவேற்றவோ மாட்டாது.
இதனை இலங்கை அரசியல் வரலாற்றினுாடக பார்த்தால் புரியும். 1948 ஆண்டு ஆகஸ்ட் மாதம் டி.எஸ்.செநனநாயக்கா . அரசாங்கத்துடன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் இணைந்து அரசியல் நடாத்தியதன் விளைவு மலையக தமிழர்களின் வாக்குரிமையும், குடியுரிமையும் நடைமுறையில் பறிபோனமை, கிழக்கில் தமிழர் தாயக நிலத்தை சிங்களக் குடியேற்றத்தின் வாயிலாக சிங்கள ஆட்சியாளர்கள் பறிப்பதிலேயே முடிந்தது.
அதேபோல 1965 ஐக்கிய தேசியக் கட்சியுடன் டட்லி - செல்வா- பொன்னம்பலம் ஆகியோரிர் இணைந்து கூட்டுத் தேசிய அரசாங்கத்தை அமைத்தனர். இதில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் மு.சிவசிதம்பரம் உப சபாநாயகர் பதவி பெற்றார். தமிழரசுக் கட்சி சார்பில் மு.திருச்செல்வம் அமைச்சுப் பதவி பெற்று தங்கள் சுயநலன்களை மட்டும் அடைந்தனர்.
ஆனால் தமிழ் மக்களுக்கு மேன்மேலும் அழிவையே தந்தது. டட்லி-செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்ட பின்பும் மாவட்டசபை மசேதாவை டட்லி நிராகரித்து தோற்கடித்த பின்பும் தொடர்ந்து கூட்டரசாங்கத்தில் அங்கம் வகித்தவர்கள் திருமலை புனிதநகரப் பிரகடணத்துடன் 1969ல் திருச்செல்வம் பதவி விலகினாலும் கூட்டரசாங்கத்திற்கான தமது ஆதரவை ஆதரவை தமிழரசுக் கட்சி விலக்கவில்லை.
இறுதி நேரத்தில் திருச்செல்வன் இப்பதவி விலகலானது 1970 அண்டின் தேர்தலை எதிர்கொள்வதற்கான தமிழரசுக் கட்சியின் நாடகம்தான். இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முழுமையான காலத்தையும்(ஐந்து ஆண்டு) நிறைவுசெய்த அரசாங்கம் இந்த டட்லி-செல்வா-பொன்னம்பலம் கூட்டு அரசாங்கம்தான் என்பதை இன்றைய தமிழ்த் தலைவர்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.
இந்த டட்லி- செல்வா-பொன்னம்பலம் கூட்டு அரசாங்கத்தினால் தமிழர் தாயகநிலத்தில் பசுமை புரட்சி என்ற பெயரில் சிங்களக் குடியேற்றங்களை ஸ்தாபிதம் அடையச் செய்யவும் தமிழர் உரிமைகளைப் பறிப்பதிலேயுமே முடிந்தது.
2015 ரணில் சம்பந்தன் நல்லாட்சி அரசாங்கம் தமிழர்களை பாதுகாப்பதற்கு பதிலாக இனப்படுகொலையாளர்களை பாதுகாப்பதிலும், படுகொலை இராணுத்தை பாதுகாப்பதற்கும்இ முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையை மூடி மறைப்பதற்கும், சர்வதேச அளவில் தமிழர்களுக்கான அனுதாப அலையை தடுக்கவும் சர்வதேய ஆதரவை மழுங்கடிக்கவும் பயன்படுத்தப்பட்டது.
எப்போதும் சிங்கள தேசத்தில் நல்லாட்சி அரசாங்கம்இ கூட்டரசாங்கம், தேசிய அரசாங்கம் என பேசப்படுபவை சிங்கள உயர் குழாத்துக்கு இடையிலான அதிகாரங்களை பங்கிடுவதற்கும் அதே நேரத்தில் தமிழ் இன ஒடுக்குமுறையை சாதுரியமாக நிறைவேற்றுவதற்காகவுமே உருவாக்கப்பட்டன என்ற வரலாற்று அனுபவத்தை மறந்து விடக்கூடாது.
பெரும்பான்மைச் சிங்கள மக்கள்,சிங்கள சாதீய உயர்குழாம்இ கூடவே சிங்கள இடதுசாரிகள் என அனைவரும் ''பௌத்த சிங்கள தேசியம்'' எனும்போது உள்ளக முரண்களை சரித்துக்கொண்டு அவர்கள் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான நிலைப்பாட்டை தவறாது எப்போதும் எடுத்தே வந்திருக்கிறார்கள்.
மதங்கொண்ட யானைகள்போல சிங்கள சாதிமேலாதிக்க அரசியல்வாதிகள் தமக்குள் மோதிக்கொண்டாலும் அதன் சக்தியின் பலப்பிரயோகம் தமிழின அழிப்பின் பக்கமே திசைதிருப்பப்பட்டுவிடும்.
அவ்வாறே இந்த சாதிமேலாதிக்க அரசியல் யானைகள் கூட்டச் சேர்ந்து புணர்ந்து குதுாகலித்தாலும் அந்த இன்பத்தினாலுருவாகும் சக்தி தமிழினவழிப்பின் பக்கமே திசைதிருப்பப்படும் என்ற வரலாற்று உண்மையை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மேலும் இன்று ஆட்சி மாற்றத்துக்கு துணைபுரியஇ பங்களிக்க முற்படுகின்ற அனைத்து தரப்பினரும் சிங்கள உயர்குழத்திற்கு இடையிலான அதிகாரப் பங்கீடலுக்காக ஒருங்கிணைகிறார்களேயே தவிர இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை எட்டவோ, தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வினை வழங்கவோ, அல்லது நீதியை வழங்கவோ அவர்கள் தயாரில்லை.
மாறாக ஆட்சி மாற்றத்தின் ஊடாக மேன்மேலும் புதிய வழிகளில் தமிழ் இன ஒடுக்குமுறையை மேலும் விஸ்தரித்து முன்நகர்த்தி செல்வதற்கான புதிய மூலோபாயங்களை வகுத்துச் செயல்படுபவர்களாகவே சிங்கள தலைவர்கள் காணப்படுகின்றனர்.
எனவே ராஜபக்ஷக்களுக்கு எதிரான மாற்று தலைமை என்பதோ ஆட்சி மாற்றம் என்பதோ மேன்மேலும் இன ஒடுக்குமுறையை அதிகரித்து செல்வதற்கான வாய்ப்புக்களை ஊக்குவித்து அதிகரித்து செல்லவே உதவும்.
இலங்கையின்அரசியலை ஒரு வரலாற்று தொடர்ச்சியின் அடிப்படையில் நோக்குகையில் சாதிய குடும்ப ஆதிக்கத்தின் விளைவுகளிலிருந்து தான் அவை தம்மை நிலை நிறுத்துவதற்கு தமிழின அழிப்பை கருவியாகக் கையில் எடுத்துக் கொண்டன என்பதனை அறிந்து கொள்ள முடிகிறது.
குடும்ப ஆதிக்கம் போட்டியின் விளைவுதான் ஐக்கிய தேசியக் கட்சியின் சேனநாயக்கா குடம்ப ஆதிக்கத்துடனான முரண்பட்டினால் அக்கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவரான பண்டாரநாயக்க ஐ. தே .க. இருந்து பிரிந்து 1951 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைத்துக் கொண்டார். அவர் தன்னை வளர்த்துக் கொள்வதற்காக சிங்கள மக்கள் மத்தியில் வெளிப்படையான இனவாதத்தை கட்டவிழ்த்துவிட்டார்.
அவர்வாறுதான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பண்டாரநாயக்கா குடும்பத்துக்கும் ராஜபக்சே குடும்பத்துக்கும் இடையிலான அதிகாரப் போட்டி 2005 தேர்தலின்போது பூதாகரமாக வெடித்தது. யுத்தவெற்றியின் பின்னர் ராஜபக்ஷக்கள் சுதந்திரக் கட்சி கூடாக பயணித்த போதிலும் 2015 தேர்தலின் பின்பு சுதந்திர கட்சி ராஜபக்ஷவின் கையைவிட்டு நழுவியது.
இந்நிலையில் பண்டாரநாக்க குடும்ப வேரைக் கொண்ட சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி தமது ராஜபக்ச குடும்ப ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்கான ஒரு தனி அமைப்பாக 2016 நவம்பர் மாதம் பொதுஜன பெரமுன என்ற புதிய கட்சியை ஆரம்பித்து அதிதீவிர இனவாத கருத்துக்களை சிங்கள மக்கள் மத்தியில் விதைத்தனர்.
அதே போலத்தான் இன்று ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சாதி ஆதிக்கத்தின் தொடர் பயணமாக சேனநாயக்க குடும்பத்தின் இறுதி வாரிசான ரணிலுக்கும் சஜித் பிரேமதாசாவிற்கும் இடையிலான அதிகாரப் போட்டியின் விளைவுதான் ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக உடைந்து 2020ல் ஐக்கிய மக்கள் சக்தி என்ற புதிய அமைப்பை சஜித் பிரேமதாசா உருவாக்கியுள்ளார்.
இப்பின்புலத்தில் சிங்கள சாதிய உயர்குழாத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்ட கடந்தவாரம் அரசியல் எதிரிகளான ரணில்-மகிந்த இணைந்த விருந்துபசாரமும் மந்திராலோசனையும் அமைகிறது.
எனவே இலங்கை அரசியலில் சிங்கள கட்சிகள் குடும்ப ஆதிக்கப் போட்டியினால் இரண்டாக உடைவதும் அதன் தொடர்ச்சியாக சாதி அடிப்படையில் தற்போது உடைவதும் அதனுாடாக அவை அரசியலில் ஆதிக்கம் செலுத்துவதையும் புரிந்துகொள்ள தற்போதைய கட்சி நிலவரங்கள் நல்ல உதாரணங்களாகும்.
எனவே இனிவரும் காலத்திலும் இலங்கை அரசியலில் குடும்ப ஆதிக்கமும் சாதி ஆதிக்கமும் செல்வாக்குச் செலுத்தும் என்பதனையும் அதன் பின்னணி ஊடாகவே இலங்கை அரசியலையும் தமிழர் தாம் சார்ந்த அரசியலையும் நோக்க வேண்டும் என்பதுவும் கவனத்திற்குரியது.
தமிழ் தலைவர்கள் இவற்றைக் கொண்டுதான் வெளியரசுடன் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவது அவசியம். வெளியரசுகளுக்கு ஆட்சி மாற்றம்தான் முக்கியமானதாக உள்ளது. இந்தச் சாதி குடும்ப ஆதிக்க நிலமைகளுக்கு பொருத்தமானதாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வெளியரசுகள் முனைகின்றன.
ஆனால் தமிழ்த் தலைவர்கள் இந்த விடயத்தை கருத்தில் கொண்டு இலங்கை அரசியலில் காணப்படும் சிங்கள-பௌத்த சாதி குடும்ப மேலாதிக்க நோக்கு நிலையை புரிந்துகொண்டு அதனை எதிர்கொள்ளக் கூடிய வகையில் வெளியரசுகளை கையாண்டு தமிழ் மக்கான அரசியல் நலன்களை அடைவதற்கான மூலோபாயத்தை வகுக்க வேண்டும்.
வரலாற்று ரீதியாக சாதிபேத குடும்ப அரசியல் ஆதிக்கப் போட்டியில் ஈடுபடும் சிங்களத் தலைவர்கள் அவரவர் தாங்கள் போட்டியில் முன்னணியில் நிற்பதற்காகவும் தாம் வெற்றி பெறுவதற்காகவும் கையிலெடுத்த பிரதான ஆயுதமாக தமிழ் இன ஒடுக்குமுறை அமைந்துள்ளது.
இன
ஒடுக்குமுறையை ஒரு கருவியாக போட்டி போட்டு
கையில் எடுத்துக் கொண்ட சிங்களக் கட்சிகள் ஒவ்வொரு
காலகட்ட போட்டிகளிலும் தமிழின அழிப்பினை
முனைப்புடன் நிறைவேற்றுவதில் வெற்றி பெற்று
முன்னோக்கி நகர்ந்து செல்கின்றனர் என்பதையே
தமிழின அழிப்பு வரலாறு துயரத்துடன் பதிவு செய்கின்றது.