பொருளாதார நெருக்கடியை இனப்பிரச்சினையுடன் இணைக்க வேண்டும் - அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம்
பொருளாதார நெருக்கடியை இனப்பிரச்சினையுடன் இணைக்க வேண்டும் என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அமெரிக்கா இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 44 வீதத்திலிருந்து 30 வீதமாகக் குறைத்துள்ளது. இந்த 30 வீத வரி கூட இலங்கைக்கு பெரிய சுமை தான். இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களில் 25 வீதமானவை அமெரிக்காவிற்;கே அனுப்பப்படுகின்றன. இதற்கான மாற்றுத் தெரிவுகளும் தற்போதைக்கு இல்லை.
ஆடை உற்பத்திகளே அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவ்வரி விதிப்பினால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. இலங்கையின் போட்டி நாடுகளில் வியட்னாமுக்கு 20 வீத வரியும், இந்தியாவிற்கு 26 வீத வரியும், விதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு போட்டி நாடான பங்களாதேசிற்கு 30 வீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் அங்கு உற்பத்திச் செலவுகள் குறைவாக இருப்பதனால் அது ஒருவாறு சமாளிக்கப் பார்க்கும். இலங்கையில் உற்பத்திச் செலவுகள் அதிகம். எனவே போட்டி நாடுகளுக்கு முகம் கொடுப்பதும் கடினம். இலங்கையை விட வியட்னாம், இந்தியா போன்ற நாடுகளிலும் உற்பத்தி செலவு குறைவு என்று கூறலாம். இந்த வரி விதிப்புக்கு முகம் கொடுப்பது இலங்கைக்கு மிகக் கடினமாகவே இருக்கும்.
அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை இலங்கை குறைக்குமாக இருந்தால் அமெரிக்கர் சமரசத்திற்கு வரலாம். வியட்னாம் அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு பூச்சியவரியை விதித்தே சமரசத்திற்கு வந்து தனது ஏற்றுமதிப் பொருட்களுக்கான வரியை 20 வீதமாகக் குறைத்தது. அவ்வாறு பூச்சிய வரியை விதிப்பது இலங்கைக்கு இலகுவான ஒன்றல்ல. பொருளாதார நெருக்கடியினால் இலங்கைக்கு அதிகளவு டொலர் தேவைப்படுகின்றது.
இந்த நிலையில் கெஞ்சிக் கூத்தாடியாவது வரியை 15 வீதமாக குறைப்பதற்கே இலங்கை முயற்சிக்கின்றது. கடந்த 18 ஆம் திகதி இது தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்துவதற்காக இலங்கையின் தூதுக்குழு ஒன்று அமெரிக்காவிற்கு சென்றுள்ளது. பொருளாதார நிபுணரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்ஸடி.சில்வா அமெரிக்கா நிச்சயம் 15 வீதமாகக் குறைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தோ - பசுபிக் மூலோபாயம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமெரிக்கா கடன் வழங்குனர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளமையினால் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கூறியிருக்கின்றார். பொருளாதார சமரச முயற்சிகளுக்குகூடாக நகர்வது இலங்கைக்கு கடினமாக இருக்கும். அமெரிக்க ஜனாதிபதி இலகுவில் இறங்கி வர மாட்டார். அரசியல் பக்கமாக நகர்ந்தால் சிலவேளை வெற்றிகள் கிடைக்கலாம். பூகோள அரசியல் நலன்கள் தொடர்பில் அமெரிக்க நலன்களுக்கு முக்கியத்துவம் அளித்தால் அமெரிக்கா இறங்கி வரலாம்.
அமெரிக்கா இலங்கைத் தீவு தொடர்பாக இந்தோ - பசுபிக் மூலோபாயத்தை நகர்த்தி வருவதால் அந்த நலன்கள் பேணப்படும் போது இறங்கி வர வாய்ப்புக்கள் உண்டு. வல்லரசுகள் இறங்கி வர வேண்டுமென்றால் ஒன்றில் அவர்களின் நலன்கள் பேணப்படல் வேண்டும். அல்லது உள்நாட்டு அழுத்தங்கள் இருக்க வேண்டும். அமெரிக்காவில் உள்நாட்டு அழுத்தங்களைக் கொடுப்பதற்கு இலங்கைக்கு வாய்ப்புகள் குறைவு.
எனவே பூகோள அரசியல் நலன்களைத் தான் அதனால் தேர்ந்தெடுக்க முடியும். அமெரிக்க நலன்களுக்கு முக்கியத்துவம் வழங்கினால் இந்தியாவும் சீனாவும் கோபிக்க பார்க்கும். இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை குறைத்தல் என்ற மூலோபாயம் தொடர்பாக இந்தியா அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்தாலும் தன்னைவிட தென்னாசியப் பிராந்தியத்தில் குறிப்பாக இலங்கையில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துவதை இந்தியா விரும்பப்போவதில்லை.
ஏற்கனவே இலங்கை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவில்லை என்ற அதிர்ப்தி இந்தியாவிற்கு உண்டு. அதனை அவ்வப்போது சுட்டிக்காட்டவும் இந்தியா தயங்கவில்லை. குறிப்பாக பாதுகாப்பு ஒப்பந்த விடயத்தில் இந்தியா மிகவும் கவனமாக இருக்கின்றது. அந்த ஒப்பந்த உள்ளடக்கத்தை இலங்கை அரசாங்கம் இன்னமும் நாடாளுமன்றத்தில் கூட வெளிப்படுத்தவில்லை. சீனாவுடனான ஒப்பந்தங்களையும் இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை.
இது விடயத்தில் சீனாவும் தொடர்ச்சியான அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றது. ஜே.வி.பி யின் செயலாளர் ரில்வின் சில்வாவை சீனாவுக்கு அழைத்தும் சில செய்திகளை சீனா சொல்லியிருக்கின்றது. இது விடயத்தில் இரு பெரிய இழுவிசைகளுக்கிடையில் இலங்கை மாட்டுப்பட்டு இருக்கின்றது.
இந்த விவகாரத்தில் தேசிய மக்கள் சக்தி கூட இரண்டாக பிளவுப்பட்டு இருக்கின்றது என்றே செய்திகள் வருகின்றன ஜனாதிபதியும், பிரதமரும் அதிகம் இந்திய - மேற்குலகக் கூட்டின் பக்கமே நிற்பதாகவும் கதைகள் அடிபடுகின்றன. எனவே அமெரிக்காவின்; அதிக பிரசன்னத்தை சீனாவும் சகித்துக் கொள்ளப் போவதில்லை. பூகோள அரசியல் பிரச்சினையும் பொருளாதார நெருக்கடியும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து தொடர்ந்தும் செயல்படப் போகின்றன.
இது தொடர்கதையாக இருக்கும் நிலையில் தமிழ்த் தரப்பும் தங்கள் நலன்களிலிருந்து இந்த விவகாரத்தை கையாளத் தவறக்கூடாது. இதனை வரலாறு தமிழ் மக்களுக்கு தந்த சந்தர்ப்பம் என்றே கருத வேண்டும். இலங்கைத் தீவை மையமாகக் கொண்ட புவிசார், பூகோள அரசியலில் தமிழ் மக்களும் கௌரவமான பங்காளிகள.; இதனை இக்கட்டுரையாளர் முன்னரும் பல தடவைகள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
ஆனால் துரதிஸ்டவசமாக 2009 ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் இந்த பங்காளித்துவம் நடைமுறைக்கு வரவில்லை. தமிழ் அரசியல்; சக்திகள் இதனை முழுமையாகப் புரிந்து கொண்டு அக்கறை செலுத்;தாததே இதற்கு காரணமாகும். புவி சார், பூகோள அரசியலில் எந்தெந்த வழிகளிலிலெல்லாம் பங்காளிக்க முடியுமோ அதனைச் செய்வதற்கு தமிழ்த் தரப்பு தயங்கக்கூடாது. இதனை மேற்கொள்வதற்கு பிராந்திய, சர்வதேச அரசியின் பரிணாமங்களை அறிவுபூர்வமாக தமிழ்த்தரப்பு பெற்றுக் கொள்வது அவசியம். ஒரு அரசற்ற சமூகத்திற்கு சர்வதேச ரீதியாகவும், பிராந்திய ரீதியாகவும் வாய்ப்புகள் குறைவு என்பது உண்மைதான்.
பொருளாதார நெருக்கடி
அதற்காக வாய்ப்புகளே இல்லை என்ற வரட்டு வாதத்திற்கு தமிழ்த் தரப்பு செல்லக்கூடாது. வாய்ப்புக்களைத் தேடி அடையாளம் கண்டு அதனை பயன்படுத்த முன் வர வேண்டும். சிறிய சிறிய வாய்ப்புகள் இருந்தாலும் அதனை பயன்படுத்த தயங்க கூடாது. சர்வதேச, பிராந்திய பரப்பு என்பது ஒருபடித்தானதல்ல. அங்கு நாம் செயற்படக்கூடிய பல்வேறு வெளிகள் உள்ளன. அந்த வெளிகளை பயன்படுத்தி சிறிய சிறிய வெற்றிகளை முதலில் அடைந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். சிறிய சிறிய வெற்றிகளினூடாகவே பெரிய வெற்றிகளை நோக்கி நகரலாம். முன்னர் கூறியது போல புவிசார், பூகோள, அரசியல் நெருக்கடியும், பொருளாதார நெருக்கடியும் தமிழ்த் தரப்புக்கு தற்போது கிடைத்த வாய்ப்புகள்.
அதனைப் பயன்படுத்தி முன்னேறிச் செல்ல முயற்சிக்க வேண்டும். இனப்பிரச்சனையை தீர்க்காமல் பொருளாதார நெருக்கடியை முழுமையாகத் தீர்க்க முடியாது என்பதே யதார்த்த நிலையாகும். இதுவரை காலமும் சர்வதேச , பிராந்திய ரீதியாக வெற்றிகள் கிடைக்கவில்லை எனக் கூற முடியாது சில வெற்றிகள் கிடைத்துள்ளன. இந்த வெற்றிகளுக்கு முக்கிய காரணம் புவிசார், பூகோள அரசியல் நெருக்கடிகளே! கனடா நாடாளுமன்றத்தில் இன அழிப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் இன அழிப்பு வாரத்தை அனுஸ்டிக்கின்றது.
கனடா பிரட்மன் நகர சபை முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை தாயக வரைபடத்துடன் உருவாக்கியுள்ளது. அமெரிக்க அரசாங்கம் போர் குற்றவாளிகளுக்கு பயணத்; தடைகளை விதித்துள்ளது. கூடவே பிரிட்டன் அரசாங்கமும் இவ்வாறான தடைகளை விதித்துள்ளது. தமிழர்கள் சர்வதேச அரசியலில் பங்களிக்க கூடிய களத்தை ஜெனிவா உருவாக்கியுள்ளது. அந்தக்களம் பொறுப்புக் கூறல் விவகாரத்தை தொடர்ந்தும் பேசுபொருளாக வைத்திருக்கின்றது. மொறீசியஸ்; நாட்டிலும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உருவாக்கப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளர்; செம்மணி மனிதப்புதைகுழிகளை பார்வையிட்டதோடு அணையா விளக்கிற்கும் அஞ்சலி செலுத்தியுள்ளார். பிராந்திய வல்லரசான இந்தியா தமிழர்களின் சமத்துவம், உரிமை பேணப்பட வேண்டும் என்பதை தனது இலங்கை தொடர்பான வெளிநாட்டுக் கொள்கையில் ஒன்றாக வகுத்துள்ளது. தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற மிகப்பெரும் நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டசபை இன அழிப்புத் தீர்மானத்தையும், சர்வதேச விசாரணை வேண்டும் என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது. இவையெல்லாம் முக்கிய அடைவுகள.; இவை போதுமானதென கூற வரவில்லை. இவற்றை முதலீடுகளாக வரித்து முன்னேறிச் செல்வதற்கு முயற்சிக்க வேண்டும். சர்வதேச பிராந்திய அரசியலை மேற்கொள்வதற்கு வெளிநாட்டுக் கொள்கை அவசியம்.
பயிற்சி பெற்ற இராஜதந்திர லொபி அவசியம். எதுவும் இல்லாமல் வெறும் வெறும் உதிரி உதிரியான நடவடிக்கைகள் மூலமே மேற்கூறிய அடைவுகள் பெறப்பட்டுள்ளன.
வெளிநாட்டுக் கொள்கையும் இராஜதந்திர லொபியும் இருக்குமானால் மேலும் முன்னேறிச் செல்ல முடிந்திருக்கும். அமெரிக்காவின் 20 வீத வரிவிதிப்பு ஆகஸ்ட் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரப்போகின்றது. இடையில் சிலவேளை மாற்றங்கள் வரலாம். இனனோர் பக்கத்தில் ஐரோப்பிய யூனியன் ஜி.எஸ்.பி வரிச்சலுகையை வழங்குவது தொடர்பான உரையாடலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.
பிரிட்டன் இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு பூச்சிய வரியை விதிக்கப் போவதாக செய்திகள் வருகின்றன. இந்த விவகாரங்களில் தமிழ் மக்களின் அபிலாசைகளையும் இணைத்துக் கொள்வதற்கு நாம் முயற்சிக்க வேண்டும் பொருளாதாரப் பிரச்சினையின் அடி வேரே இனப் பிரச்சனை தான். இனப்பிரச்சினையை தீர்க்காமல் பொருளாதார நெருக்கடிக்கு முழுமையான தீர்வை காண முடியாது.
என்பதை இந்த நாடுகளுக்கு புரிய வைக்க வேண்டும். இதனால் பொருளாதார உதவிகளை வழங்குவதற்கு நிபந்தனைகளாக தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்க்க வேண்டும் என்பதை முன் வைக்க வேண்டும் என அழுத்தம் கொடுக்க வேண்டும் இதற்கு தாயகத்தில் இருந்து இது தொடர்பாக ஒருங்கிணைந்த குரல் எழுச்சியடைய வேண்டும்.
தொடர்ந்து புலம்பெயர் தரப்புக்கள் ஒருங்கிணைந்து இதற்கான அழுத்தங்களை கொடுக்கலாம். ; இனப் பிரச்சினையுடன் தொடர்புபட்ட தமிழ் மக்களின் அபிலாசைகளாக அரசியல் தீர்வு, பொறுப்புக் கூறல், ஆக்கிரமிப்பு விவகாரம் என்பன உள்ளன. அத்துடன் நிலைமாறு கால நீதிப் பிரச்சனையான அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் போனோர் விவகாரம், காணிப்பறிப்பு என்பனவும் இருக்கின்றன. பூகோள அரசியல் வாய்ப்புகளுக்குப்பால் அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் புலம்பெயர் தமிழ் மக்கள் ஒரு அரசியல் சமூகமாக உள்ளனர். அமெரிக்காவில் இது சற்றுக் குறைவு என்றாலும் கனடாவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் இது அதிகமாக உள்ளது.
அமெரிக்காவில் வலுவான தமிழ்க் கல்வியாளர் அணி உண்டு. அவர்களின் பலர் அரசமட்டத்தோடு நெருங்கிய தொடர்பில் உள்ளனர். அவர்களின்; முயற்சிகளினால் போர்க் குற்றவாளிகளுக்கு பயணத்தடைகள் விதிக்கப்பட்டன. ; அமெரிக்க செனற் சபை உறுப்பினர்கள் பலர் தமிழ் மக்களின் விவகாரங்களில் அக்கறையாக உள்ளனர். பல தீர்மானங்களை சபையில் கொண்டு வருவதற்கு அவர்கள் உதவியிருக்கின்றனர்.
இந்த விவகாரத்திலும் அவர்களின் உதவிகளை நாடலாம். ஏற்கனவே அமெரிக்காவில் உள்ள தமிழ் முக்கியஸ்தர்கள் இந்த விவகாரத்தை முன்னெடுக்கலாம.; எனக் கூறியிருக்கின்றனர். அதற்கு முதலில் தாயகத்திலிருந்து ஒருங்கிணைந்த குரல் வரவேண்டும் என்றும் கூறியிருக்கின்றனர. ; தாயகத்தில் சிவில் அமைப்புகளும் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் பிரிவு தவிர்ந்த ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளும் இதற்கு ஆதரவாக உள்ளன. சுமந்திரன் பிரிவுக்கும் வலுவான அழுத்தத்தை கொடுக்கும் போது ஆதரவு நிலைக்கு கொண்டு வரலாம்.
தமிழ்த் தேசிய கட்சிகளும், சிவில் அமைப்புகளும் இதற்கான முயற்சிகளை இப்போதே ஆரம்பிப்பது நல்லது. பிரிட்டனின் பூச்சிய வரி விதிப்பு தொடர்பாகவும் அக்கறை செலுத்துவது அவசியம். பிரிட்டனில் தமிழ் மக்கள் ஒரு அரசியல் சமூகமாக உள்ளனர்.
அங்கு உமைகுமாரன் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கின்றார். ஏற்கனவே செம்மணி விவகாரத்தை அரசாங்கத்தின் கவனத்திற்கு அவர் கொண்டு வந்திருக்கின்றார். இந்த விவகாரத்தையும் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து பூச்சிய வரி விதிப்புடன் தமிழ் மக்களின் அவிலாசைகளையும் சேர்க்குமாறு அழுத்தம் கொடுக்கலாம்.
பிரிட்டனுக்கு தமிழ் மக்கள் தொடர்பாக ஒரு பொறுப்பு இருக்கின்றது. ஒரு வகையில் தமிழ் மக்கள் மீதான ஒடுக்கு முறைக்கும் அதன் வழியான இன அழிப்புக்கும் பிரிட்டனே அடித்தளமாக இருந்தது. தனித்துவமான அரசபண்பாட்டு, அடையாளங்களுடன் வாழ்ந்த தமிழ் மக்களை ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் திணித்து இன அழிப்பிற்கு அத்திவரமிட்டது பிரிட்டன் தான்.
இதற்கு பொறுப்புக் கூற வேண்டிய தார்மீகக் கடமை பிரிட்டனுக்கு உண்டு என்பதை நினைவூட்டலாம். ஐரோப்பிய யூனியன் ஜி.எஸ்.பிளஸ் சலுகையையும் இனப் பிரச்சனையுடன் இணைக்க வேண்டும் அது தொடர்பாகவும் பல கடமைகள் காத்திருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக இந்த முயற்சிகளை இந்தியா குழப்பாமல் இருப்பதையும் கண்காணித்து கொள்ளல் அவசியம்.




