நாட்டின் பொருளாதாரம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கை ரூபாவின் பெறுமதி மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்தால், எதிர்காலத்தில் எரிபொருள், மின்சாரக் கட்டணங்கள், நீர் கட்டணங்கள் மற்றும் ஏனைய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மத்திய வங்கி சந்தையிலிருந்து டொலர்களை கொள்வனவு செய்வதாலும், நிதி அமைப்பில் ரூபாயின் அதிகப்படியான புழக்கம் காணப்படுவதாலும் அமெரிக்க டொலருக்கான தேவை அதிகரித்துள்ளது என பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ, தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதுவே இலங்கை ரூபாயின் மதிப்பு பலவீனமடைவதற்கு முக்கிய காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக, கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கும் வெளிநாட்டு செலாவணி தொகை குறைந்துள்ளதுடன், ஏற்றுமதி துறை எதிர்கொண்டுள்ள சவால்களும் நாட்டுக்குள் டொலர் வருவதை வரையறுத்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை எரிபொருளை அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்தியே இறக்குமதி செய்வதால், ரூபாயின் தொடர்ச்சியான வீழ்ச்சி குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் டொலரில் இறக்குமதி செய்யப்பட்டு, பின்னர் ரூபாயாக மாற்றப்பட்டே அதன் விலை தீர்மானிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
எனவே, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இதனால் நேரடியாக பாதிக்கப்படலாம். ரூபாய் மதிப்பிழக்கும் போது, அதற்கேற்ப எரிபொருள் விலையும் உயர்கிறது என தெரிவித்துள்ளார்.
இந்த எரிபொருள் விலை உயர்வு பணவீக்கத்திற்கு வழிவகுத்து, அதன் விளைவாக மின்சாரக் கட்டணம், நீர்க் கட்டணம் மற்றும் ஏனைய அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கக் காரணமாக அமையும் என எச்சரித்துள்ளார்.
இதேவேளை, 2023 டிசம்பர் 22 ஆம் திகதிக்கு பின்னர் அமெரிக்க டொலரின் அதிகூடிய விற்பனை விலை நேற்று பதிவாகியது.
இலங்கை மத்திய வங்கியின் (CBSL) உத்தியோகபூர்வ தரவுகளின்படி, நேற்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ. 331.15 ஆக பதிவாகியுள்ளது. நேற்று முன் தினம் இதன் விற்பனை விலை ரூ. 329.92 ஆக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri