திருகோணமலையில் பொருளதார தொகைமதிப்பு தெளிவூட்டும் வேலைத்திட்டம்!
திருகோணமலை மாவட்டத்தில் 2025/26 ஆண்டிற்கான பொருளதார தொகைமதிப்பு விவசாயம் சார் நடவடிக்கை தொடர்பான தெளிவூட்டும் வேலைத்திட்டம் இடம்பெற்றது.
இந்த வேலைத்திட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார தலைமையில் மாவட்ட புள்ளிவிபரவியலாளர் இசட்.ஷரிபுதீன் ஏற்பாட்டில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இன்று (03) இடம்பெற்றது.
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையில் தொகைமதிப்பு ஆணையாளர், பிரதி மற்றும் உதவி தொகைமதிப்பு ஆணையாளர்களை தெளிவூட்டும் வேலைத்திட்டமாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிதி திட்டமிடல்
ஒவ்வொரு குடிசன வீட்டு வசதிகள் தொகைமதிப்பின் பின்னர் உள்ள ஒரு வருடத்தில் அல்லது இரண்டு வருடத்தினுள் வருகின்ற 10 வருட காலத்தினுள் பொருளாதார கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சம்பந்தமாக அறிந்து கொள்ள விவசாய நடவடிக்கை மற்றும் விவசாயமற்ற பொருளாதார நடவடிக்கைகளை உள்ளடக்கி தொகைமதிப்பை நடாத்த வேண்டியுள்ளது.
அந்த வகையில் பொருளாதார தொகைமதிப்பு 2025 மற்றும் 2026 வருடங்களில் இரண்டு கட்டங்களாக நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முதலாவது 2025 ஆம் ஆண்டில் விவசாய நடவடிக்கைகளின் தகவல்களை திரட்டுதல், இரண்டாவது 2026 ஆம் ஆண்டில் கைத்தொழில், வர்த்தகம் மற்றும் சேவைத் துறைகளை உள்ளடக்கிய விவசாயம் அல்லாத பொருளாதார நடவடிக்கைகளைக் களத்தில் கணக்கெடுத்தல் போன்றவையாகும்.
கடமைகள்
இதன்போது விவசாய நடவடிக்கைகளுக்கான விவசாய புள்ளிவிவரங்கள், விவசாய தொகைமதிப்பு முறைகள், தகவல் திரட்டு முறை, நிர்வாகக் கட்டமைப்பு, கள கடமைகளுக்கு உத்தியோகத்தர்களை நியமனம் செய்தல், கள நடவடிக்கையின் பொருட்டு உத்தியோகத்தர் நியமனம், தொகைமதிப்பு உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி அளித்தல், தொகைமதிப்பு ஆணையாளராக நியமனம் பெறும் உத்தியோகத்தர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள், பிரதி மற்றும் உதவி தொகைமதிப்பு ஆணையாளராக நியமனம் பெறும் உத்தியோகத்தர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக தெளிவூட்டப்பட்டன.
இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் (விவசாய பிரிவு) பணிப்பாளர் கலாநிதி.ஜே.கே.பி.என்.ஜெயகொடி, பொருளாதார கணக்கெடுப்பு மாவட்ட இணைப்பாளர் கே.பி.எஸ்.பி.டி.எஸ். அரசகுலரத்ன,தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் புள்ளிவிபரவியலாளர் ( தலைமை அலுவலகம்) நில்மினி குணவர்தன, பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



