ஈஸ்டர் தாக்குதலில் இலாபம் பெற்றவர்கள்-பிள்ளைகளின் புத்தக பையில் போதைப் பொருளை தேடுகின்றனர்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு பதிலாக அரசாங்கம் பாடசாலை பிள்ளைகளின் புத்தக பைகளில் போதைப் பொருளை தேடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
குருணாகலில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொதிகளில் போதைப் பொருளை தேடாத அரசாங்கம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தியவர்கள் மாணவர்களின் புத்தக பைகளில் போதைப் பொருளை தேடுகின்றனரே தவிர பொறுப்பு கூற வேண்டியவர்கள் பற்றி எவ்வித தேடுதல்களையும் நடத்தவில்லை.
போதைப் பொருள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொதிகளை சோதனையிடாத அரசாங்கம், அரச பாடசாலை மாணவர்களின் புத்தக பையை சோதனையிடுவது மிலேச்சத்தனமான செயல்.
பாடசாலை மாணவர் சமுதாயத்தை இவ்வாறு தொந்தரவுக்கு உட்படுத்துவது அநீதியானது. போதைப் பொருள் என்ற தொற்று நோயை நாட்டில் இருந்து முற்றாக உடைத்தெறிய வேண்டும்.
ஈஸ்டர் தாக்குதல் பயங்கரவாதிகளை அரசாங்கத்திற்கு பிடிக்க முடியாது

அதற்காக கடுமையான தண்டனைகளை வழங்குது குறித்து யோசனை முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் அரசாங்கம் அதற்கு விருப்பத்தை வெளியிடவில்லை.
பாடசாலை மாணவர்கள் இடையில் போதைப் பொருளை தேடும் அரசாங்கம் மறைந்து போயுள்ள ஈஸ்டர் தாக்குதலின் நீதியை தேட பாடுப்படுவதில்லை.
புத்தக பொதிகளில் போதைப் பொருளை பிடிக்கும் அரசாங்கத்திற்கு ஈஸ்டர் தாக்குதலின் பயங்கரவாதிகளை பிடிக்க முடியாது எனவும் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.