சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி உட்பட சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் காணொளி மூலமாக இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
63ஆவது சந்தேகநபரான மொஹமட் ஹில்மி நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளர்.
கடந்த 21.04.2019 உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையதாகவும், ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்ற சந்தேகத்தின் பெயரிலும் காத்தான்குடியை சேர்ந்த 65 பேரை கைது செய்யப்பட்டிருந்தனர்.
அதேவேளை சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர் உட்பட 4 பேரை மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்தனர்.
இதன்படி இரு வெவ்வேறு வழக்குகளை கொண்ட 69 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் 5 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் ஏனைய 64 பேரும் பொலன்னறுவை, அநுராதபுரம், கேகாலை, திருகோணமலை போன்ற சிறைச்சாலைகளில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.