ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு திகதி அறிவிப்பு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொர்பிலான வழக்கு விசாரணையின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22ம் திகதி வழங்கப்பட உள்ளது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுக்கான சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அத்தாக்குதலுக்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் 25 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு விசாரணை செய்யப்பட்டது.
இந்த வழக்கின் தீர்ப்பு, செப்டம்பர் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு நிரந்தர மூவர் கொண்ட மேல் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் தீர்மானித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு சிறப்பு மூவர் கொண்ட மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
உயிர்த்த ஞாயிறு வழக்கின் பிரதிவாதிகள் தரப்பு வாய்மொழிச் சமர்ப்பணங்கள் இன்று மாலை 6.00 மணியளவில் நிறைவடைந்த நிலையில், இரு தரப்பினரின் எழுத்துப்பூர்வ சமர்ப்பணங்களை வரும் செப்டம்பர் மாதம் 08 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் இதன்போது உத்தரவிட்டது.
கொழும்பு சிறப்பு மூவர் கொண்ட மேல் நீதிமன்ற நீதியரசர்களான நவரத்ன மாரசிங்க (தலைமை நீதியரசர்), சுஜீவ நிஸ்சங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இத்தகவல் வெளியானது.
இவ்வழக்கின் முறைப்பாட்டாளர் தரப்பு சாட்சியப் பதிவுகள் கடந்த (13) ஆம் திகதி பிற்பகலுடன் நிறைவடைந்தன. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகள் 25 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் சுமத்தப்பட்டிருந்தன.
இவ்வழக்கில் பிரதிவாதிகளின் 10 வாக்குமூலங்களை நீதிமன்றம் சாட்சியங்களாக ஏற்றுக்கொண்டுள்ளதோடு, மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகள், வெடிபொருட்கள், வாள்கள், துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்து தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் உட்பட 2,076 வழக்குப்பொருட்கள் விசாரணையின் போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரியவந்தது.
அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகள் பலவும், அதிகளவிலான டி.என்.ஏ அறிக்கைகள், மருத்துவ அறிக்கைகள் மற்றும் மரண பரிசோதனை அறிக்கைகளும் சான்றுகளாகப் பதிவேற்றப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 பிரதிவாதிகளுக்கு எதிராகவே சட்டமா அதிபரால் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான 23,270 குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்ட 25 பிரதிவாதிகளில் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி இடம்பெற்ற இந்த தொடர் தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 270க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன், 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கு ஒன்றின் தீர்ப்பின் பிரகாரம் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு அண்மையில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் வழக்குகள் குறித்த விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8 Evening