ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான முன்னாள் ஜனாதிபதியின் மனுமீதான விசாரணைக்கு திகதி அறிவிப்பு!
உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்துள்ள மனுவை விசாரிக்க திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிபால சிறிசேனவை விசாரணைக்குட்படுத்தி தண்டனை வழங்குமாறு கோரி அருட்தந்தை சிறில் காமினி, மற்றும் தாக்குதலில் காயமடைந்த ஜேசுதாசன் நடேசன் ஆகியோர் தனிப்பட்ட மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.
மைத்திரிபால சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு
இந்நிலையில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடுகளை வலுவிழக்கச் செய்ய உத்தரவிடுமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 31ஆம் திகதி ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி, ஜூலை 31 மற்றும் ஓகஸ்ட் 9ஆம் திகதிகளில் இந்த மனு மீதான விசாரணை நடைபெறும் என்று நீதியரசர் குழாம் உத்தரவிட்டுள்ளது..
