மைத்திரிபாலவுடன் நீதி அமைச்சர் வலம் வருவதற்குக் கடும் எதிர்ப்பு: துமிந்த எம்.பி போர்க்கொடி
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் உட்பட நீதிமன்றத்தில் பல வழக்குகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் (Maithripala Sirisena) அழைப்பையேற்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நிகழ்வுகளில் பங்கேற்பது ஏற்புடையது அல்ல என்று நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க(Duminda Dissanayake) தெரிவித்துள்ளார்.
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் ஜனன தின நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
அவர் மேலும் கூறியதாவது,
"ஆளுங்கட்சி பக்கம் இருப்பதால் தான் நிமல் சிறிபால டி சில்வா, மகிந்த அமரவீர உள்ளிட்டவர்கள் கட்சியின் இருந்து நீக்கும் முடிவை மைத்திரிபால சிறிசேன எடுத்தார்.
எனினும், அரசில் அமைச்சுப் பதவியை வகிக்கும் விஜயதாச ராஜபக்ச சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்படுகின்றார். இதில் உள்ள நியாயத்தன்மை என்ன?
மைத்திரிபால சிறிசேனவுக்கு உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் குறித்து சுமார் 400 வரையான வழக்குகள் உள்ளன.
அண்மையில் கூட சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு சிக்கலில் மாட்டினார்.
இவ்வாறு நீதிமன்றத்தில் பல வழக்குகள் உள்ள நபரின் அழைப்பையேற்று நீதி அமைச்சர் நிகழ்வுகளில் அதுவும் அவருடன் பங்கேற்பது ஏற்புடையதா? இதனால் நீதியின் நம்பகத்தன்மை குறித்து மக்கள் மத்தியில் சந்தேகம் எழக்கூடும்.
விஜயதாச ராஜபக்சவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. எனவே, அவர் இப்படியான நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது" என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |