வடக்கில் வாழும் மக்கள் தொடர்பில் ஊடகத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
வடக்கில் வாழும் மக்களில் சுமார் 85 வீதமானவர்கள் இந்திய தொலைக்காட்சி அலைவரிசைகளை பார்க்க பழகிக்கொண்டுள்ளதால், அங்கு வாழும் பிள்ளைகளுக்கு இலங்கையில் நடக்கும் சம்பவங்கள் குறித்த சாதாரண அறிவு குறைவாக இருப்பதாக ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும(Dullas alahapperuma) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஊடகத்துறை அமைச்சு சம்பந்தமான ஆலோசனை தெரிவுக்குழுக் கூட்டத்தில் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
அரச ஊடகங்கள் வழங்கும் தகவல்கள் தமிழ் மக்கள் மத்தியில் சென்றடையாத சிக்கல் காணப்படுகிறது. அரச ஊடக நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளில் தமிழ் உறுப்பினர்களை நியமிக்க வேண்டியது அத்தியவசியம். அதேபோல் அரச ஊடகங்கள் வணிக ரீதியாக தோல்வியடைந்து வருவதை தொடர்ந்தும் அரசினால் தாங்க முடியாமல் உள்ளது.
அரச ஊடகங்களை பராமரிக்க மாதாந்தம் 4 கோடி ரூபாவுக்கும் மேல் செலவாகின்றது. நஷ்டத்தில் இயங்கி வரும் அரச ஊடகங்களை இலாபமீட்டும் நிலைமைக்கு கொண்டு வர வேண்டுமாயின் மிகவும் ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிகளை வழங்க வேண்டும்.
அரச ஊடகத்துறைக்குள் இந்த விடயத்தில் பின்னடைவான நிலைமை இருப்பதை ஏற்றுக்கொள்கிறேன். இதனை சரி செய்ய துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேவேளை தொலைக்காட்சிகளில் வன்முறை மற்றும் சிறுவர்களுக்கு பொருத்தமற்ற உள்ளடக்கங்கள் அடங்கிய திரைப்படங்கள் ஒளிப்பரப்பபடுவதால், அவற்றை ஒளிப்பரப்ப உகந்த நேரத்தை பரிந்துரைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட வேண்டியது முக்கியம் எனவும் அமைச்சர் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே இந்த கூட்டத்தில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரெஜினோல்ட் குரே, நேத்ரா தொலைக்காட்சி வழியாக முதலாம் ஆண்டு முதல் 13 ஆம் ஆண்டு வரையான தமிழ் மாணவர்களுக்கு பிற்பகல் 4 மணி முதல் இரவு 12 மணி வரை கல்வி நிகழ்ச்சி ஒளிப்பரப்படுவதாக கூறியுள்ளார்.