இரட்டை குடியுரிமை பெற்றவர்களால் நாட்டுக்கு நன்மையே நடந்தது- சாகர காரியவசம்
இரட்டை குடியுரிமை பெற்ற நபர்களால் நாட்டு நன்மை நடந்ததே அன்றி பாதிப்பு ஏற்படவில்லை எனவும் இரட்டை குடியுரிமையால் நாட்டுக்கு பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே அதற்கு எதிராக சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பசில் ராஜபக்ச அரசியலுக்கு வருவதை தடுக்கவே இரட்டை குடியுரிமை பற்றிய விவாதங்கள் ஏற்பட்டன
பசில் ராஜபக்ச மற்றும் அவர் அரசியலுக்கு வருவதை தடுக்கும் நோக்கிலேயே இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாது என்ற வாத விவாதங்கள் முன்வைக்கப்பட்டன.
பசில் ராஜபக்ச தொடர்பில் ஒரு பீதி இருந்தது. அதன் காரணமாகவே இரட்டை குடியுரிமை பற்றி கேள்வி எழுப்பினர். நபர்களை பார்த்து அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றக்கூடாது.
இரட்டை குடியுரிமை பெற்றவர்களால் நாட்டுக்கு பாதிப்பு ஏற்பட்டது என்பதை எவராலும் சுட்டிக்காட்ட முடியாது. அப்படி நடக்கவும் முடியாது.
கிணற்று தவளை மனநிலை
உலகில் முன்னேற்றிய நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகள் இரட்டை குடியுரிமை பெற்ற நபர்களை தலைமைத்துவத்திற்கு வரவும் அனுமதி வழங்குகின்றன. தீவு கிணற்று தவளை மனநிலையில் இருக்கும் எமது நாட்டவர்கள் அதற்கு அஞ்சுகின்றனர்.
கடந்த காலத்தில் நடந்த யுத்தம் மற்றும் ஜே.வி.பி வன்செயல்கள் காரணமாக நாட்டின் புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறினர். தற்போது எமது நாட்டுக்கு புத்திஜீவிகள் தேவை. அவர்கள் நாட்டுக்கு வரும் சந்தர்ப்பை இல்லாமல் செய்தால் எம்மால் முன்நோக்கி செல்ல முடியாது எனவும் சாகர காரியவசம் கூறியுள்ளார்.