பொலிஸாரின் தலையீட்டினால் கடமையிலிருந்து விலகிய பிரதேச செயலக அதிகாரிகள் (Video)
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென்னெருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று (25) எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட குடும்ப விநியோக அட்டையின் பிரகாரம், அதிகாரிகள் பதிவு செய்ததன் பின்னர் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் நிருணயிக்கப்பட்டுள்ளபடி, மோட்டார் சைக்கிளுக்கு 1500 ரூபாவிற்கும், முச்சக்கரவண்டிக்கு 2000 ரூபாவிற்கும், கார்களுக்கு 7000 ரூபாவிற்கும் எரிபொருள் வழங்கப்பட்டதாக பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் தலையீடு
குடும்ப அட்டையின் பிரகாரம் சுமுகமாக எரிபொருள் வழங்கப்பட்டு கொண்டிருந்தபோது இடைநடுவே பொலிஸார் தலையீடு செய்துள்ளனர்.
இதன் காரணமாக மேற்குறித்த நடைமுறையின்கீழ் மக்களுக்கு எரிபொருள் வழங்க முடியாமல் போயுள்ளது.
இதேவேளை, அங்கிருந்த பாதுகாப்பு தரப்பினரால் அரச உத்தியோகத்தர்கள் அச்சுறுத்தல்களுக்கு உட்பட்ட காரணத்தினால் கடமையிலிருந்து இடைநடுவே வெளியேறியதாக பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் யாவருக்கும் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக தூர இடங்களிலிருந்து வருபவர்கள் குடும்ப அட்டை வைத்திருக்கமாட்டார்கள்.
இந்த நிலையில் அவர்களுக்கும் எரிபொருள் வழங்க வேண்டும். எனவே, தாம் அனைவருக்கும் சீராக எரிபொருள் வழங்குவதற்குரிய கடமைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மக்கள் முறைப்பாடு
அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடைமுறைக்கமைய எரிபொருள் வழங்கும் செயற்பாடுகளுக்கு மாறாக, சிலர் செல்வாக்கை பயன்படுத்தி எரிபொருள் பெற்றுக்கொள்கின்றனர்.
இதுபோன்ற செயல்களினால், நாள் கணக்கில் காத்திருக்கும் மக்கள் எரிபொருளின்றி திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அரசாங்கம் QR குறியீடு அடிப்படையில் அனைவருக்கும் சீரான முறையில் எரிபொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






