சர்வதேச ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ள இலங்கை - வெளியான காரணம்
இலங்கை, தற்போது தெற்காசியாவின் மிகவும் ஆச்சரியமான போதைப்பொருள் விநியோக மையமாக மாறியுள்ளதாக கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்ட, போதைப்பொருட்கள் தொடர்பான அதிக கைதுகள், இதனை மறுக்க முடியாத யதார்த்தமாக மாற்றி வருகின்றன.
தலைப்புச்செய்தி
இதன் காரணமாக, இலங்கை தற்போது, சர்வதேச ஊடகங்களிலும், தலைப்புச்செய்திக்குள் இடம்பிடித்துள்ளதாக ஊடகம் ஒன்றின் பத்தி எழுத்துப் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன்னர், பிரித்தானியாவின் யுவதி ஒருவர் குஸ் ரகப் போதைப்பொருட்களுடன் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அவர் எடுத்து வந்த அல்லது அவருக்கு தெரியாமல் அவருடன் உடமைகள் ஊடாக கடத்தப்பட்ட, இந்த போதைப்பொருட்கள், இலங்கை, முக்கிய விநியோக மையமாக மாறியுள்ளதை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இதற்கு மத்தியில் கடந்த மூன்று வாரக்காலப்பகுதியில்; இலங்கையின் பிரதான விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தியதற்காக குறைந்தது நான்கு வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல்
இதற்கிடையில், கிழக்கு மற்றும் தெற்கு கடற்கரைகளில் சந்தேகத்திற்கிடமான பல மீன்பிடி கப்பல்களில் இருந்து, இலங்கையின் கடற்படை பொருமளவு போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளது.
தென்கிழக்கு ஆசியா, தெற்காசியா மற்றும் அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவுக்கான கப்பல் பாதைகளுக்கு இடையில்,தாய்லாந்து, மியான்மர் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு, முக்கிய மையமாக அமைந்துள்ளது.
இலங்கை அதிகாரிகளின் கூற்றுப்படி, பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள, குறைந்தது 35 இலங்கையர்கள், தற்;போது துபாயில் தங்கி செயற்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடத்தல்காரர்களின் புகலிடம்
எனினும் அவர்கள் துபாயின் சட்டங்களை மீறவில்லை என்பதால், அந்த நாட்டு அரசாங்கம் அவர்கள் மீது நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக, துபாய், அறியாமலோ அல்லது வேறுவிதமாகவோ, தெற்காசிய போதைப்பொருள் கடத்தல்காரர்களின் புகலிடமாக மாறியுள்ளது.
குறிப்பாக, கொழும்பைச் சேர்ந்த போதைப்பொருள் மன்னர்களுக்கு துபாய் இப்போது ஒரு புகலிடமாக உள்ளதாக குறித்த ஊடகத்தின் பத்தி எழுத்துப்பகுதியில் கூறப்பட்டுள்ளது.
