மதுபோதையில் பேருந்தை செலுத்திய சாரதி கைது
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை மதுபோதையில் செலுத்தியதாக கூறப்படும் சாரதி ஒருவர் கந்தபளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (24.09.2025) இடம்பெற்றுள்ளது.
பேருந்தில் 30இற்கும் அதிகமான பயணிகள்
நுவரெலியாவிலிருந்து - உடப்புசல்லாவ நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை மது போதையில் கவனக்குறைவாக செலுத்துவதாக பேருந்தில் பயணம் செய்தவர்கள் பொலிஸ் அவசர சேவை இலக்கமான 119 ஊடாக தகவல் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து கந்தபளை பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து மேற்கொண்ட சோதனையின் பின்னர் 56 வயதுடைய சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரை கைது செய்யும் போது பேருந்தில் 30இற்கும் அதிகமான பயணிகள் இருந்துள்ளதாகவும் குறித்த சாரதி தொடர்பில் இதற்கு முன்னரும் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த நபர் மீது நுவரெலியா மாவட்ட நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக கந்தபளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



