கடற்றொழில் துறையை மேம்படுத்தும் ஒத்துழைப்புக்களை எதிர் பார்க்கின்றோம்! - அமைச்சர் டக்ளஸ்
கடற்றொழில் துறையை மேம்படுத்துவதற்கு நவீனமயப்பட்ட ஒத்துழைப்புக்களை இலங்கை அரசாங்கம் எதிர் பார்ப்பதாகவும், இலங்கை கடற்பரப்பில் மீன் வள ஆய்வுகளை மேற்கொள்வது நாட்டின் கடற்றொழிலாளர்களுக்கும், கடற்றொழில் துறைக்கும் ஆரோக்கியமான எதிர் காலத்தினை உருவாக்கும் எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் மீன் வள ஆய்வுகளை மேற்கொள்வதற்கான இணைந்த வேலைத்திட்டம் ஒன்றைக் கடற்றொழில் அமைச்சு மற்றும் இலங்கைக்கான நோர்வே தூதரகம் ஆகியன இணைந்து இன்றைய தினம் (20) ஆரம்பித்திருந்தன.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் இலங்கைக்கான நோர்வே தூதுவர் ரைன் ஜோன்லி ஸ்கெண்டல், கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் இந்து ரத்னாயக்க மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
கடற்றொழில் துறையில் இலங்கையும், நேர்வேயும் நீண்டகால பரஸ்பர உறவுகளைக் கொண்டிருப்பதுடன், கடற்றொழிலாளர்கள் வாழ்வாதாரம் மற்றும் உள்நாட்டுப் பொருளாதாரம் ஆகியவற்றையும் உறுதி செய்வதிலும் கவனம் செலுத்துகின்றன.
அதுமட்டுமல்லாது அதிகளவு கடல் வளங்களைக் கொண்ட தீவாக இலங்கை காணப்படுவதால் அந்த வளங்களை நிலைபேறான வகையில் பேணுவது அரசாங்கத்தின் குறிக்கோளாக உள்ளது.
அதனடிப்படையில் இத்தகைய ஆய்வுகள் அடிப்படையிலான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தைப் பிரயோகித்து அந்தத் துறையை ஊக்குவிப்பதற்கும் அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என தெரிவித்துள்ளார்.
அத்துடன் சவால்கள் நிறைந்த தற்போதைய சூழ்நிலையிலும் தொடர்ச்சியாக இலங்கைக்கு ஆதரவு
வழங்கியமைக்காக நோர்வே அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்
என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.