'நான்' என்பதை 'நாம்' என மாற்றுவதே பிரச்சினைகளுக்கான தீர்வு: டக்ளஸ் தேவானந்தா
'நான்' என்பதை 'நாம்' என மாற்ற முடியுமானால், இந்த நாட்டில் நிறைய பிரச்சினைகளுக்கு சுலபமான தீர்வுகளை எட்ட முடியும் என நம்புவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை தொடர்பில் நாடாளுமன்றில் இன்றைய தினம் (09.02.2024) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“புறநானூற்றில் கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற வரிகளுக்கு ஒப்ப வாழ்ந்து வருபவன் நான்.
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை
இங்கு 'நான்' என்பதை 'நாம்' என மாற்றுவதால், நாட்டின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என நான் கருதுகின்றேன்.
‘நான்’ எனக் கூறும்போது, உதடுகள் ஒட்டாமல் பிரிந்தே இருக்கும். ‘நாம்’ எனக் கூறும்போதுதான் உதடுகள் ஒட்டியிருக்கும் என கலைஞர் மு. கருணாநிதி கூறுவார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த நாட்டு மக்கள் பட்ட துன்ப, துயரங்களையும், இனிமேல் அனுபவிக்க போகின்ற நன்மைகளையும் ஒரு வரலாற்று அறிக்கையாக தனது கொள்கைப் பிரகடன உரையில் முன்வைத்திருக்கின்றார்.
குறிப்பாக 'நமக்கு நாமே விளக்குகளாவோம்' என்ற புத்த பெருமானின் போதனையில் ஆரம்பித்து, மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கவிதை வரிகளையும் இணைத்து அவர் தனது கொள்கைப் பிரகடன உரையினை ஆற்றியிருந்தார்.
மக்களின் ஒத்துழைப்பு
ஒற்றுமை என்பது முக்கியமானது. இதனையே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்.
'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு' என்பது மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கவிதை வரிகள்.
நாட்டிற்காக ஜனாதிபதி எடுத்து வருகின்ற அனைத்து முயற்சிகளுக்கும், இந்த நாட்டு மக்கள் தங்களது ஒத்துழைப்புகளை வழங்கினால், இந்த நாட்டினை வெகு விரைவாக அனைத்து துறை சார்ந்தும் முன்னேற்ற முடியும் என்பதை நாம் இன்று நடைமுறைச் சாத்தியமாக உணர்ந்து வருகிறோம்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த வாரம் சரிகமப சீசன் 5 நிகழ்ச்சியில் ஸ்பெஷல் கெஸ்ட்.. குடும்பத்துடன் வந்த பிரபலம், வீடியோ Cineulagam
