தமிழ் தேசியத்தை தேர்தல் கோசமாக உச்சரித்தவர்கள் நாங்கள் அல்ல: டக்ளஸ் பகிரங்கம்
தமிழ் தேசியத்தை வெறும் தேர்தல் கோசமாக உச்சரித்தவர்கள் நாங்கள் அல்ல எனவும், அரசுடன் பின் கதவு தட்டி பேசியவர்கள் அல்ல எனவும் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பகிரங்க கருத்தொன்றை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று(01.07.2023) நடைபெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு விடயம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், "கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் முறையான ஆய்வுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றனவே தவிர, தான்தோன்றித்தனமாக எவையும் மேற்கொள்ளப்படவில்லை.
புதிய திட்டங்கள்
சுயநல சந்தர்ப்பவாதிகளின் கூக்குரல் தொடர்பில் மக்களும் ஊடகங்களும் விழிப்புணர்வுடனும் பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டும்.
மேலும், வடக்கு மாகாணத்திலே எமது மக்களின் வாழ்வாதாரங்கள் கருதி, ஏற்கனவே ஒரு சிலர் மாத்திரம் பயன்பெற்று வந்திருந்த கடலட்டைப் பண்ணைக் கைத்தொழிலை நாம் பரவலாக்கி இதுவரையில் பல நூற்றுக் கணக்கான தொழில் முயற்சியாளர்களை உருவாக்கியிருக்கின்றோம்.
“பழையன கழிதலும் புதியன புகுதலும்”; என்ற அடிப்படையில் கடற்றொழில் மற்றும் நீர் வேளாண்மை சார்ந்து நாம் பல்வேறு புதிய திட்டங்களை செயற்படுத்தி வருகின்றோம்.
'கறுப்புத் தங்கம்' எனப்படுகின்ற கடலட்டைப் பண்ணைக் கைத்தொழிலானது எமது மக்களின் பொருளாதாரத்தில் அதீத செல்வாக்கு செலுத்த ஆரம்பித்ததும், சில தமிழ் அரசியல்வாதிகள் முதற்கொண்டு, சில சுரண்டல்வாதிகள் அதற்கெதிரான கருத்தாடல்களை முன்வைத்து வருகின்றனர்.
அரசுடன் பின் கதவு தட்டி பேசியவர்கள்
மக்களின் அவலங்களுக்கு தூபமிடுபவர்கள், ஆசை காட்டி தமது ஏவலாளர்களை தூண்டி விடுகிறார்கள். அதன் மூலம் உயர்ந்த இலட்சிய கோபுரங்களை உடைத்து வீழ்த்தி குட்டிசுவர்களாக்கி விடலாம் என கனவு காண்கிறார்கள்.
தம்மால் முடியாததை அடுத்தவன் செய்தால் அதைத்தடுக்க தகிடு தித்தி தாளம் போடுவது தமிழ் தேசியம் அல்ல. நாங்கள் தமிழ் தேசத்தின் விடியலுக்காக நீதியான வழியில் இரத்தமே சிந்தியவர்கள். தமிழ் தேசியத்தை வெறும் தேர்தல் கோசமாக ஒரு போதும் உச்சரித்தவர்கள் அல்ல.
நாங்கள் அரசியல் யதார்த்த சூழலை உணர்ந்து தேசிய நல்லிணக்க பாதையில் வெளிப்படையாகவே அணிவகுப்பவர்கள். எக்காலத்திலும் அரசுடன் பின் கதவு தட்டி பேசியவர்கள் அல்ல.
அல்லது தென்னிலங்கையை தூண்டி விட்டு அதில் குளிர் காய, தமிழர் தேசத்தில் அர்த்தமற்ற ஆர்ப்பாட்டங்கள் செய்பவர்களும் அல்ல.
மக்களது வாழ்வாதாரங்கள்
விளக்கங்களை கோரும் மக்களுக்கு குழப்பங்களை உருவாக்குவதை நிறுத்துங்கள். சில தொண்டு நிறுவனப் பிரதிநிதிகளும் , விளக்கமில்லாததும் - விளக்கமிருந்தும் விளங்காதது போன்ற கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இவர்கள், தங்களது வாழ்வாதாரங்களை மாத்திரம் கருத்தில் கொள்ளாமல், மக்களது வாழ்வாதாரங்கள் தொடர்பிலும் அக்கறை செலுத்த வேண்டும் என்றும், மக்களுக்கு சரியான தகவல்களை வழங்க முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.
எமது மக்களுக்கு நன்மைகள் கிட்டும் போது அதைத் தடுத்து நிறுத்தி, எமது மக்களை தொடர்ந்தும் கையேந்தும் நிலையில் வைத்துக் கொண்டு, அரசியல் செய்வதும், தமது பிழைப்புகளை முன்னெடுப்பதும் இவர்களது நோக்கமாக இருக்கின்றது.
நாங்கள் முறையான ஆய்வுகளுக்கூடாகவே திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். அன்றி, தான்தோன்றித் தனமாக எதையும் முன்னெடுப்பதில்லை. வெளிப்படையான தன்மை கொண்டவையாகவே இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
சுயலாப அரசியல்
கடலட்டை, இறால், நண்டு, கடல் பாசி, சிப்பி போன்ற நீர் வேளாண்மைக் கைத்தொழில்களை ஒருவர் மேற்கொள்ள வேண்டுமெனில் முதலில் அவர், அத் தொழிலினை மேற்கொள்கின்ற பிரதேசத்திற்குரிய பிரதேச செயலாளரிடம் அது சார்ந்த கோரிக்கைக் கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
அதன் பின்னர் தேசிய நீரியல் வளங்கள் அபிவிருத்தி அதிகார சபை(நெக்டா), கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம், கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் அடங்கலாக கள ஆய்வு நடத்தப்பட்டு, கடற்றொழில் அமைச்சு அதன் சாதக, பாதகங்ளை ஆய்வு செய்த பின்னரே குறித்த நபருக்கு நீர் வேளாண்மைக்கான அனுமதி வழங்கப்படுகின்றது.
இதனை விளங்கிக் கொள்ளாமல் சுயலாப அரசியலுக்காக சிலர் கூக்குரல் இடுவது தொடர்பில் எமது மக்களும் தமிழ் ஊடகங்களும் விழிப்புடனும் பொறுப்புடனும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்" என நாடாளுமன்ற உரையில் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |